திருப்பூரில் குப்பைக்கிடங்கில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது


திருப்பூரில் குப்பைக்கிடங்கில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது
x
தினத்தந்தி 29 Aug 2019 10:15 PM GMT (Updated: 29 Aug 2019 8:34 PM GMT)

திருப்பூரில் குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது.

நல்லூர்,

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் 500 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. அதனை மாநகராட்சி வாகனங்களில் எடுத்துச்சென்று அந்தந்த மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலி இடம் மற்றும் பாறைக்குழிகளில் கொட்டி வருகின்றனர்.

அந்த வகையில் 3-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை காங்கேயம் ரோடு முதலிபாளையம் பிரிவு, புதுப்பாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான பாறைக்குழியில் கொட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென அப்பகுதியில் தீ பற்றி எரிய தொடங்கியது. அத்துடன் காற்று பலமாக வீசியதால் மற்ற பகுதிகளிலும் தீ பரவியது. இதனால் அப்பகுதியில் பெரும் புகைமூட்டமாக காணப்பட்டது.

இதன் காரணமாக அப் பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. யாராவது குப்பைக்கு தீவைத்தார்களா? அல்லது அணைக்கப்படாத சிகரெட், பீடி துண்டுகளால் தீ விபத்து ஏற்பட்டதா? என்று தெரியவில்லை.

இது குறித்து உடனடியாக திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து தெற்கு தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் 2 லாரிகளிலும், மாநகராட்சி தண்ணீர் லாரிகளில் அங்கு வந்தனர். பின்னர் அங்கு பற்றி எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர். 

Next Story