கீழணையில் இருந்து வினாடிக்கு 1,900 கனஅடி நீர் திறப்பு, வீராணம் ஏரி நீர்மட்டம் 45.50 அடியாக உயர்ந்தது


கீழணையில் இருந்து வினாடிக்கு 1,900 கனஅடி நீர் திறப்பு, வீராணம் ஏரி நீர்மட்டம் 45.50 அடியாக உயர்ந்தது
x
தினத்தந்தி 30 Aug 2019 10:45 PM GMT (Updated: 30 Aug 2019 9:45 PM GMT)

கீழணையில் இருந்து வினாடிக்கு 1,900 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.50 அடியாக உயர்ந்தது. இதனால் சென்னைக்கு கூடுதலாக குடிநீர் அனுப்பப்படுகிறது.

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 16 கிலோ மீட்டர் நீளம், 5.6 கிலோ மீட்டர் அகலம், 48 கிலோ மீட்டர் சுற்றளவு என பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள் ளது. ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியா கவும், மழைக்காலங்களில் செங்கால்ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வருகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். மேலும் வீராணம் ஏரியில் உள்ள 34 மதகுகள் வழியாக 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.

அதுமட்டுமின்றி சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் முக்கிய பங்கு இந்த ஏரிக்கு உண்டு. அதாவது வீராணம் ஏரியில் தண்ணீர் இருக்கும் அளவை பொறுத்து ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கனஅடி நீர் கொண்டு செல்லப்பட்டு, மாநகர மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும். கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததாலும், ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வராததாலும் வீராணம் ஏரி நீர்மட்டம் 39.30 அடியாக குறைந்தது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக கடந்த 13-ந் தேதி தண்ணீர் திறந்து வைத்தார். காவிரி ஆற்றில் கரைபுரண்டு வந்த இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததும், கடந்த 17-ந் தேதி பாசனத்துக்காக கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்பட்ட நீர், 21-ந் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழணையை வந்து சேர்ந்தது.

கீழணையின் மொத்த நீர்மட்டமான 9 அடியில் 5 அடியை எட்டியதும், வடவாறு வழியாக கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரிக்கு பொதுப்பணித்துறை அதி காரிகள் தண்ணீர் திறந்துவிட்டனர். அதாவது தண்ணீர் வரத்துக்கு ஏற்ப வினாடிக்கு ஆயிரம் கனஅடி முதல் அதிகபட்சமாக 2,300 கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த காவிரி நீர் கடைமடை பகுதியான வீராணம் ஏரிக்கு கடந்த 22-ந் தேதி மதியம் வந்து சேர்ந்தது. தொடர்ந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. நேற்று மாலை நிலவரப்படி கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1,900 கனஅடிநீர் வந்து கொண்டிருந்தது. ஏரியின் நீர்மட்டம் 45.50 அடியாக உயர்ந்தது. இதனால் ஏரி, கடல் போல் காட்சி அளிக்கிறது. வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் சென்னைக்கு கூடுதலாக குடிநீர் அனுப்பப்படுகிறது. ஆம், கடந்த மாத தொடக்கத்தில் வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 20 கன அடி முதல் 28 கனஅடி வரை சென்னைக்கு குடிநீருக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று காலை முதல் சென்னைக்கு வினாடிக்கு 45 கனஅடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.

Next Story