நாளை அமித்ஷா முன்னிலையில் முன்னாள் முதல்-மந்திரி நாராயண் ரானே பா.ஜனதாவில் சேருகிறார்


நாளை அமித்ஷா முன்னிலையில் முன்னாள் முதல்-மந்திரி நாராயண் ரானே பா.ஜனதாவில் சேருகிறார்
x
தினத்தந்தி 30 Aug 2019 11:18 PM GMT (Updated: 30 Aug 2019 11:18 PM GMT)

அமித்ஷா முன்னிலையில் முன்னாள்முதல்-மந்திரி நாராயண் ரானே பா.ஜனதாவில் சேருகிறார்.

மும்பை,

மராட்டியத்தின் கொங்கன் பகுதியில் செல்வாக்கு மிக்க தலைவர் நாராயண் ரானே. சிவசேனா ஆட்சியில் இருந்த போது முதல்- மந்திரியாக இருந்தவர். உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் சிவசேனாவில் இருந்து விலகினார்.

பின்னர் 2005-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியில் இணைந்த உடனே காங்கிரஸ் இவருக்கு மாநில மந்திரி சபையில் இடம் அளித்தது. மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் அந்தஸ்தும் இவருக்கு கிடைத்தது.

2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று அப்போது முதல்-மந்திரியாக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தனக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என நாராயண் ரானே ஆசையோடுகாத்து இருந்தார். ஆனால் காங்கிரஸ் மேலிடம் அசோக் சவானை முதல்-மந்திரி ஆக்கியது. இது நாராயண் ரானேக்கு மிகுந்த ஏமாற்றத்தை உண்டாக்கியது.

இந்தநிலையில் 2017-ம் ஆண்டு நாராயண் ரானே, தன்னை முதல்- மந்திரி ஆக்காமல் காங்கிரஸ் ஏமாற்றி விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து, அக்கட்சியில் இருந்து விலகினார். பின்னர் சுவாபிமான் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். தொடர்ந்துஅவருக்கு பா.ஜனதாவுடன் நெருக்கம் ஏற்பட்டது. பா.ஜனதா ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

பா.ஜனதாவுடனான நாராயண் ரானேயின் நெருக்கம் பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் அவ்வப்போது கூட்டணியில் சலசலப்பும் உண்டானது.

அக்டோபர் மாத வாக்கில் நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தீவிரம் காட்டி வரும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் இருந்து முக்கிய தலைவர்களை தங்கள் பக்கம் ஐக்கியப்படுத்தி வருகின்றன.

அந்த வரிசையில் நாராயண் ரானே பா.ஜனதாவில் இணைய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இது சிவசேனாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாராயண் ரானே பா.ஜனதாவில் இணைவதை அக்கட்சி எதிர்த்தது. பா.ஜனதாவில் நாராயண் ரானேயை சேர்த்தால் அது பாலில் உப்பை சேர்ப்பதற்கு சமம். அந்த முடிவை ஒருபோதும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எடுக்க மாட்டார் என்று கூறி சிவசேனாவை சேர்ந்த மந்திரி தீபக் கேசர்கர் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்தநிலையில், தான் பா.ஜனதாவில் சேர உள்ளதை நாராயண் ரானே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். வருகிற 1-ந் தேதி (நாளை) சோலாப்பூரில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

இது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாராயண் ரானே பா.ஜனதாவில் நுழைவது பா.ஜனதா - சிவசேனா கூட்டணியில் உரசலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Next Story