கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 12-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் - அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்


கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 12-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் - அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 31 Aug 2019 10:15 PM GMT (Updated: 31 Aug 2019 6:35 PM GMT)

கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 12-ந் தேதி நீலகிரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள குதிரை பந்தய மைதானத்தை மாற்றுவது குறித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்தும் அனைத்துக் கட்சி கூட்டம் ஊட்டியில் தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முபாரக் தலைமை தாங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் திராவிடமணி, ஆர்.கணேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் பத்ரி, ம.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஆரிப்சேட், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. சுற்றுலா தலமான ஊட்டிக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் உலகின் பல பகுதிகளில் இருந்து வருகை தருகின்றனர். ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சினையாக உள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய வசதிகள் இல்லை. ஊட்டியில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க ஊட்டி குதிரை பந்தய மைதானத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது வரவேற்கத்தக்கது.

ஊட்டியில் உள்ள குதிரை பந்தய மைதானத்தை கோத்தகிரி நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட கடைக்கம்பட்டி பகுதியில் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய முயற்சிக்கிறது. இதனை அனைத்துக்கட்சிகள் கண்டிக்கிறது. இதற்காக அதிகாரிகள் மற்றும் குதிரை பந்தய நிர்வாகிகள் இடத்தை தேர்வு செய்ய சென்ற போது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குதிரை பந்தய மைதானம் அமைக்க அரசு காட்டிய நெடுகுளாக கடைக்கம்பட்டி படுகர் இன மக்கள் ஹெத்தையம்மன் திருவிழா நடத்தும் பகுதியாகவும், அருகில் ஆரம்ப பள்ளியும், விளையாட்டு மைதானமும் உள்ளது.

ஊட்டி குதிரை பந்தய மைதானத்தில் குதிரை பந்தயத்தை ரத்து செய்து, மைதானம் முழுவதையும் அரசு கையகப்படுத்தி, பார்க்கிங் மற்றும் பசுமையான சுற்றுலா பகுதியாக மாற்றி நகரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் வருகிற 12-ந் தேதி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story