டாஸ்மாக் கடையில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு வலியுறுத்தல்


டாஸ்மாக் கடையில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 Aug 2019 10:45 PM GMT (Updated: 31 Aug 2019 7:10 PM GMT)

டாஸ்மாக் கடையில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

சீர்காழி,

சீர்காழியில் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கான பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு வந்தனா, தலைமை தாங்கினார்.

சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சதீஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தர் அறிவழகன் வரவேற்று பேசினார்.

கண்காணிப்பு கேமராக்கள்

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு வந்தனா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சீர்காழி உட்கோட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பொறையாறு, பூம்புகார் ஆகிய பகுதிகளில் பணிபுரியும் டாஸ்மாக் அலுவலர்கள், டாஸ்மாக் கடையில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். குற்றவாளிகள் அல்லது சமூக விரோதிகள் டாஸ்மாக் கடைகளில் பணியாளர்களை மிரட்டி மதுபாட்டில் அல்லது பணம் கேட்டால் உடனே காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் சட்ட விரோதமாக போலி மதுபாட்டில்களை சில்லரையாக விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடை வாசல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக மது குடிப்பதை தவிர்க்க வேண்டும். கடையின் முன்பு அல்லது அருகில் உணவு பண்டங்கள் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் டாஸ்மாக் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Next Story