தென்னிலை அருகே லாரி மோதியதில் சரக்கு வேனில் சென்ற 2 பேர் பலி 7 பேர் படுகாயம்


தென்னிலை அருகே லாரி மோதியதில் சரக்கு வேனில் சென்ற 2 பேர் பலி 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 31 Aug 2019 11:00 PM GMT (Updated: 31 Aug 2019 7:30 PM GMT)

தென்னிலை அருகே லாரி மோதியதில் சரக்கு வேனில் சென்ற 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

க.பரமத்தி,

சேலம் மாவட்டம் கந்தம்பட்டி வண்டிக்காரர் நகர் மூலப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 26). இவரது மனைவி கார்த்திகா (21). இவர்களது மகன் சிவனேஷ் (1). இவர்களுடைய உறவினர்கள் மதிவாணன் (18), சபரி (17), கார்த்திக் (28), சசிகுமார் (19), விக்னேஷ் (19). இந்த 8 பேரும் சேலத்தில் இருந்து ஒரு சரக்கு வேனில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். பின்னர் அங்கிருந்து நேற்று அதிகாலை ஊருக்கு புறப்பட்டு வந்தனர். சரக்கு வேனை சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த குமார் (20) என்பவர் ஓட்டி வந்தார்.

காங்கேயத்தில் புறப்பட்ட பின் சேலத்திற்கு செல்லாமல் வழிமாறி, கரூர் நோக்கி சரக்கு வேனை குமார் ஓட்டிக் கொண்டு வந்தார். சரக்கு வேன் கரூர் மாவட்டம் தென்னிலை அருகே வைரமடை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இருந்து திருப்பூர் நோக்கி விறகுகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக சரக்கு வேன் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் சரக்கு வேன் டிரைவர் குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். ரமேஷ் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.

டிரைவர் கைது

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் தென்னிலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகர், தென்னிலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் படுகாயமடைந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இந்த விபத்து குறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story