சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மாநகரில் 310 இடங்களில் விநாயகர் சிலைகள் இந்து முன்னணி ஏற்பாடு


சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மாநகரில் 310 இடங்களில் விநாயகர் சிலைகள் இந்து முன்னணி ஏற்பாடு
x
தினத்தந்தி 31 Aug 2019 10:45 PM GMT (Updated: 31 Aug 2019 8:22 PM GMT)

சதுர்த்தி விழாவையொட்டி, திருச்சி மாநகரில் 310 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க இந்து முன்னணி ஏற்பாடு செய்துள்ளது.

திருச்சி,

நாடு முழுவதும் நாளை(திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. திருச்சி மாநகரில் இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் நகரில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா நாளை நடப்பதையொட்டி, திருச்சி மாநகரில் மட்டும் 310 இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க மாவட்ட இந்து முன்னணி ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தெரிவித்தார். நகரின் மையப்பகுதியில் ஓரிடத்தில் அதிக பட்சமாக 13 அடி உயர விநாயகர் சிலை வைக்கப்படும் என்றும், இதர பகுதிகளில் 2 அடி முதல் 9 அடி வரையிலான விநாயகர் சிலைகள் வைத்து பூஜை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல புறநகர் மாவட்டத்தில் 1000-த்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை

இதற்கிடையே நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இந்து முன்னணி நிர்வாகிகளுடன் போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் ஆலோசனை நடத்தினார். அப்போது கடந்த ஆண்டு நகரில் 260 சிலைகள்தான் வைக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 310 சிலைகள் வைக்க எப்படி அனுமதிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள், ‘நாளுக்கு நாள் நகரில் ஆஸ்பத்திரிகள் எண்ணிக்கையும், மக்கள் தொகையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதுபோலத்தான் விநாயகர் சிலைகளின் எண்ணிக்கையும் உயர்ந்து விட்டது. திருச்சி மாநகரில் 310 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி தரமுடியுமா?, முடியாதா?” என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனை நடத்தி விட்டு முடிவை தெரிவிப்பதாக கூறினார்.

விஜர்சனம்

நகரில் பல்வேறு இடங்களில் பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வருகிற 4-ந் தேதி மாலை 5 மணிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விஜர்சனம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் திருச்சி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் காவிரி பாலத்தில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இந்து முன்னணி மாநில அமைப்பாளர் க.பக்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

Next Story