குழாயில் ஏற்பட்ட உடைப்பால் 30 அடி உயரத்திற்கு பீறிட்டு வெளியேறிய குடிநீர் கடை, வீடுகளுக்குள் புகுந்தது


குழாயில் ஏற்பட்ட உடைப்பால் 30 அடி உயரத்திற்கு பீறிட்டு வெளியேறிய குடிநீர் கடை, வீடுகளுக்குள் புகுந்தது
x
தினத்தந்தி 31 Aug 2019 11:00 PM GMT (Updated: 31 Aug 2019 8:25 PM GMT)

மணப்பாறை அருகே குழாயில் ஏற்பட்ட உடைப்பால் 30 அடி உயரத்திற்கு மேல் குடிநீர் பீறிட்டு வெளியேறி, கடை மற்றும் வீடுகளுக்குள் புகுந்தது.

மணப்பாறை,

மணப்பாறை மற்றும் மருங்காபுரி ஆகிய இரண்டு தாலுகா பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது காவிரி குடிநீர் தான். இப்பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக குளித்தலை மண்தட்டை பகுதியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பஸ் நிறுத்தம் அருகே, முதல் முறையாக அமைக்கப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக்குழாயில் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இருந்து காவிரி நீர் சுமார் 30 அடி உயரத்திற்கு மேல் பீறிட்டு வெளியேறியது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அந்த குழாயின் மின் மோட்டார் உடனடியாக நிறுத்தப்பட்டது.

வீடுகள், கடைகளை சூழ்ந்தது

இருப்பினும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பீறிட்டு வெளியேறி தண்ணீர் அருகில் உள்ள வீடு மற்றும் கடைகளுக்குள் புகுந்தது. மேலும் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் சில வீடுகள் மற்றும் கடைகளை சூழ்ந்தது. இதையடுத்து வீடு மற்றும் கடைகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். மேலும் உடைப்பு ஏற்பட்ட இடம் அருகே உள்ள ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான துணிகள் தண்ணீரில் மூழ்கின. தையல் எந்திரங்களும் பழுதடைந்தன.

சமீபத்தில் பன்னாங்கொம்பு அருகே காவல்காரன்பட்டி என்ற இடத்தில் காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் பீறிட்டு வெளியேறியதில், பல லட்சம் லிட்டர் குடிநீர் மக்களுக்கு பயன்பாடின்றி வீணாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் வேதனை

மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வறட்சியால் நீர்நிலைகள், ஆழ்குழாய் கிணறுகள் வறண்டுவிட்டன. இதனால் காவிரி குடிநீரை மட்டுமே மக்கள் நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த குடிநீரும் கூட வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருவதால் மிகுந்த மன வேதனைக்கு மக்கள் ஆளாகி உள்ள நிலையில், இதுபோன்று காவிரி குடிநீர் வீணாகும் சம்பவம் அவர்களின் மனவேதனையை அதிகரிக்கச் செய்துள்ளது. எனவே இதுபோன்று குழாயில் உடைப்புகள் ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story