நெல்லையில் பரிதாபம்: பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை - டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத இருந்த நிலையில் சோக முடிவு


நெல்லையில் பரிதாபம்: பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை - டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத இருந்த நிலையில் சோக முடிவு
x
தினத்தந்தி 1 Sep 2019 10:00 PM GMT (Updated: 1 Sep 2019 8:33 PM GMT)

நெல்லையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத இருந்த நிலையில் பட்டதாரி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை,

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். தனியார் பார்சல் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் சுப்புலட்சுமி. முதுநிலை பட்டதாரி. இவர் அரசுப்பணிக்கான போட்டித் தேர்வுகளை எழுதி வந்தார். நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு எழுதுவதற்கும் தயாராகி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் திடீரென்று வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து, அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நள்ளிரவில் அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story