கூட்டணி ஆட்சி கவிழ காரணமாக இருந்ததுடன் குமாரசாமியை சித்தராமையா முதுகில் குத்தி விட்டார் - மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி


கூட்டணி ஆட்சி கவிழ காரணமாக இருந்ததுடன் குமாரசாமியை சித்தராமையா முதுகில் குத்தி விட்டார் - மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி
x
தினத்தந்தி 1 Sep 2019 11:24 PM GMT (Updated: 1 Sep 2019 11:24 PM GMT)

கூட்டணி ஆட்சி கவிழ காரணமாக இருந்ததுடன், குமாரசாமியை சித்தராமையா முதுகில் குத்திவிட்டார் என்று மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.

உப்பள்ளி,

உப்பள்ளியில் நேற்று மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர் களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

முதல்-மந்திரி எடியூரப்பாவின் பேச்சுக்கே பா.ஜனதா மேலிடம் மதிப்பளிப்பதில்லை என்று சித்தராமையா அடிக்கடி கூறி வருகிறார். அவரது பேச்சை பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஏனெனில், பா.ஜனதா மேலிடத்தின் உத்தரவுப்படி தான் எடியூரப்பா முதல்-மந்திரியாகி உள்ளார். அவர் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். முதல்-மந்திரி ஆன பின்பு ஓய்வெடுக்காமல் எடியூரப்பா உழைத்து வருகிறார். இதனால் எடியூரப்பா மீது குற்றச்சாட்டு கூறுவதற்கு வழியில்லை. பேசுவதற்கு எதுவும் இல்லாத காரணத்தால், எடியூரப்பாவின் பேச்சுக்கு பா.ஜனதா மேலிடம் மதிப்பளிக்கவில்லை என்று சித்தராமையா கூறியுள்ளார்.

மாநிலத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவி காலியாக உள்ளது. ஆனால் எதிர்க்கட்சி தலைவரை நியமிக்க காங்கிரஸ் மேலிடத்திற்கு நேரமில்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார், பரமேஸ்வர் உள்பட பல தலைவர்கள் போட்டியிடுகின்றனர். யாருக்கு அந்த பதவி கிடைக்கும் என்று தெரியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் காங்கிரசில் சித்தராமையாவின் நிலை என்ன? என்பதை அவரே அறிந்து கொள்ள வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் எடியூரப்பா மீது சித்தராமையா குற்றச்சாட்டு கூறுவது தேவையற்றது.

கூட்டணி அரசு கவிழ்வதற்கு சித்தராமையாவே முழு காரணம். கூட்டணி அரசை கவிழ்க்க அவர் எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததும் தேவேகவுடாவும், சித்தராமையாவும் வார்த்தை போரில் ஈடுபட்டதை மக்கள் மறந்து விடவில்லை. குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தது சித்தராமையாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் சித்தராமையாவின் முதுகில் குத்த குமாரசாமி நினைத்தார். அதனால் கூட்டணி அரசை கவிழ்த்துவிட்டு குமாரசாமியின் முதுகில் சித்தராமையா குத்தி விட்டார்.

பா.ஜனதா அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல. பழிவாங்கும் அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியம் பா.ஜனதாவுக்கு இல்லை. டி.கே.சிவக்குமார் வீட்டில் ரூ.8.50 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றி இருந்தனர். அதுதொடர்பாக தான் அமலாக்கத்துறையினர் டி.கே.சிவக்குமாரிடம் விசாரணை நடத்துகின்றனர். டி.கே.சிவக்குமார் தவறு எதுவும் செய்யாவிட்டால் அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு பயப்பட தேவையில்லை. இவ்வாறு மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

Next Story