திருப்பூர் வடக்கு பகுதியில் 42 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்பட்ட 4 குட்டைகள்


திருப்பூர் வடக்கு பகுதியில் 42 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்பட்ட 4 குட்டைகள்
x
தினத்தந்தி 2 Sep 2019 10:15 PM GMT (Updated: 2 Sep 2019 8:23 PM GMT)

திருப்பூர் வடக்கு பகுதியில் 42 ஆண்டுகளுக்கு பிறகு தன்னார்வ அமைப்புகள் பங்களிப்புடன் 4 குட்டைகள் தூர்வாரும் பணி நடத்தப்பட்டது. இதில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.

அனுப்பர்பாளையம்,

தமிழக அரசு சார்பில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் குடிமராமத்து பணிகளை தொடங்கி நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை சுத்தப்படுத்தி, தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு பகுதியில் வருவாய்துறைக்கு சொந்தமான கூத்தம்பாளையம், ஒட்டர்பாளையம், பிரியங்காநகர், வெங்கமேடு ஆகிய 4 குட்டைகளை தூர்வார மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி கூத்தம்பாளையம் குட்டை நிரம்பி மற்ற 3 குட்டைகள் வழியாக வெங்கமேடு நல்லாற்றில் வந்து தண்ணீர் கலக்கும் வகையில் 4 குட்டைகள் மற்றும் நீர்வழித்தடங்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருப்பூர் முயற்சி மக்கள் அமைப்பு ஒருங்கிணைப்பின் பேரில் திருப்பூர் மாவட்ட பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம், டெக்மா தொழிற்பேட்டை, உண்ணாமலைநகர், திருப்பூர் மத்திய அரிமா சங்கம், காம்பேக்டிங் அசோசியேஷன், காந்திநகர் ரோட்டரி, அவினாசி ரோட்டரி சங்கங்கள் உள்பட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் பங்களிப்புடன் இந்த குடிமராமத்து பணிகள் நடைபெறுகிறது. இதன் தொடக்கவிழா கடந்த மாதம் 6-ந்தேதி தொடங்கியது.

இதையடுத்து கடந்த 42 ஆண்டுகளாக புதர் மண்டி கிடந்த 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள கூத்தம்பாளையம் குட்டை, 2 ஏக்கரில் உள்ள ஒட்டர்பாளையம் குட்டை, 6 ஏக்கரில் உள்ள பிரியங்காநகர் குட்டை, 6 ஏக்கரில் உள்ள வெங்கமேடு குட்டை என 4 குட்டைகள் மற்றும் நீர்வழித்தடங்களும் தூர்வாரப்பட்டு வருகிறது.

கடந்த 27 நாட்களாக நடந்து வந்த தூர்வாரும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் கூத்தம்பாளையம் குட்டை தூர்வாரும் பணிகளை கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது முயற்சி அமைப்பின் தலைவர் சிதம்பரம், தொழிலதிபர் பரணி நடராஜ், முன்னாள் கவுன்சிலர் மாரப்பன், டெக்மா தொழிற்பேட்டை தலைவர் மார்க்ஸ் கிருஷ்ணன், செயலாளர் விஸ்வநாதன், டிக்சன் குப்புசாமி, உண்ணாமலைநகர் கார்த்திகேயன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

வருகிற 8-ந்தேதி காலை 9 மணிக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில், கே.என்.விஜயகுமார்எம்.எல்.ஏ. முன்னிலையில் நிறைவு விழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

அதேபோல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு நிறைவாக குட்டைகளை தூர்வாரும் பணியில் ஈடுபட உள்ள னர். இந்த விழாவின் போது குட்டைகளை சுற்றி ஆயிரம் மரக்கன்றுகள் நடுவது, ஆயிரம் பனை விதைகளை விதைப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

கடந்த 42 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடந்த 4 குட்டைகள் தன்னார்வ அமைப்புகள் பங்களிப்புடன் தற்போது தூர்வாரப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story