குவைத்தில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்


குவைத்தில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 3 Sep 2019 11:30 PM GMT (Updated: 3 Sep 2019 7:20 PM GMT)

சென்னை விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து மஸ்கட் வழியாக வந்த விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது குவைத்தில் இருந்து மஸ்கட் வழியாக வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சோதனை செய்தனர்.

அந்த விமானத்தில் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த வீரபாலி வெங்கட்ராமன் (வயது 57), மகேந்திரா(26) ஆகிய 2 பேர் வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் பூட்டுக்குரிய சாவிகளும், சுத்தியலும் இருந்தன.

இதையடுத்து அதை சோதனை செய்து பார்த்ததில், சுத்தியலில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் அதில் இருந்த 3 சாவிகளும் தங்கத்தினால் செய்யப்பட்டு இருந்ததையும் சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் பின்னர், ரூ.20 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள 673 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story