தர்மபுரி அருகே, எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் குத்திக்கொலை - தாய்-மகனுக்கும் கத்திக்குத்து


தர்மபுரி அருகே, எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் குத்திக்கொலை - தாய்-மகனுக்கும் கத்திக்குத்து
x
தினத்தந்தி 3 Sep 2019 10:45 PM GMT (Updated: 3 Sep 2019 8:15 PM GMT)

தர்மபுரி அருகே எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் குத்திக்கொலை செய்யப்பட்டார். மேலும் பக்கத்து வீட்டை சேர்ந்த தாய்-மகனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஓராண்டாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன்-மனைவி 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று இரவு ராஜா கடையில் வியாபாரம் முடிந்த பின்னர் சைக்கிளில் பாரதிபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

அப்போது மர்ம நபர்கள் அவரை திடீரென வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தினர். மேலும் அந்த நபர்கள் கத்தியால் ராஜாவின் கழுத்தை அறுத்தனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த நபர்கள் ராஜாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த பச்சமுத்து என்பவருடைய வீட்டுக்குள் புகுந்து அவருடைய மனைவி திலகவதி (42), மகன் கவுதம் (22) ஆகிய 2 பேரையும் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த திலகவதி, கவுதம் ஆகிய 2 பேரையும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் திலகவதி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து பாப்பாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். படுகாயம் அடைந்த திலகவதி சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story