‘மாணவர்கள் நிலவுக்கு செல்லும் வாய்ப்பை இஸ்ரோ ஏற்படுத்துகிறது’ நாசா விண்வெளி வீரர் பேச்சு


‘மாணவர்கள் நிலவுக்கு செல்லும் வாய்ப்பை இஸ்ரோ ஏற்படுத்துகிறது’ நாசா விண்வெளி வீரர் பேச்சு
x
தினத்தந்தி 5 Sep 2019 10:30 PM GMT (Updated: 5 Sep 2019 5:41 PM GMT)

வருங்காலத்தில் மாணவர்கள் நிலவுக்கு செல்லும் வாய்ப்பை இஸ்ரோ ஏற்படுத்தி வருகிறது என்று நாசா விண்வெளி வீரர் கூறினார்.

அருப்புக்கோட்டை,

அமெரிக்க நாசாவில் பணி புரிந்து 4 முறை விண்வெளிக்கு சென்று வந்த விண்வெளி வீரரான டான் தாமஸ் அருப்புக்கோட்டைக்கு வந்தார். அவர் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

கோ-4குரு என்ற நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி காயாம்பு ராமலிங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை சேர்ந்த பரமதயாளன், கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன், கல்லூரி செயலாளர் சங்கர சேகரன், வேதியியல் துறை தலைவர் சுப்பிரமணியன், போஸ்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் ஆலோசனைப்படி இந்த நிகழ்ச்சி நடந்தது.

இதனை தொடர்ந்து ரமணாஸ் கல்லூரியில் கல்லூரி முதல்வர் கதிர்காமு தலைமையில் நடந்த நிகழ்ச்சியிலும் டான்தாமஸ் கலந்து கொண்டார். விண்வெளி சாதனை பயண அனுபவங்களை காணொலி காட்சி மூலம் மாணவிகளுக்கு விளக்கி கூறினார். அவர் கூறியதாவது:-

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 மேற்கொள்ளும் ஆராய்ச்சி மிகவும் முக்கியமானது. அங்கு என்ன தகவல்கள் கிடைக்கும் என்பதை அறிய ஆவலாக உள்ளது. விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான பயிற்சி வகுப்புகளை மாணவர்களுக்கு இஸ்ரோ உருவாக்கி உள்ளது. வருங்காலத்தில் மாணவர்கள் நிலவுக்கு செல்லும் வாய்ப்பை இஸ்ரோ ஏற்படுத்தி கொடுத்துள்ளது. சந்திரயான்- 2 மூலம் விண்வெளி ஆராய்ச்சிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் நிலவின் தென்துருவத்தில் மனிதர்களை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது.

இவ்வாறு பேசினார்.

கல்லூரி செயலாளர் பாரதிமுருகன், டீன் தில்லைநடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளங்கோவன் நன்றி கூறினார்.

Next Story