கும்பகோணம் அருகே, கடப்பாரையால் அடித்து தொழிலாளி கொலை - தம்பி கைது


கும்பகோணம் அருகே, கடப்பாரையால் அடித்து தொழிலாளி கொலை - தம்பி கைது
x
தினத்தந்தி 5 Sep 2019 10:45 PM GMT (Updated: 5 Sep 2019 8:27 PM GMT)

கும்பகோணம் அருகே கடப்பாரையால் அடித்து தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பனந்தாள், 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாலூர் குடியான தெருவை சேர்ந்தவர் சின்னராஜ். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகன் பாஸ்கர்(வயது 42). கூலி தொழிலாளி. சின்னராஜ் மற்றும் அவருடைய கடைசி மகன் சுந்தரமூர்த்தி ஆகியோர் இறந்து விட்டனர்.

பாஸ்கர் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தனது தாய் ராணி மற்றும் தம்பி அசோக்கிடம்(40) தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் பாஸ்கர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது அவர், அசோக்கிடம் தகராறு செய்து மூங்கில் கம்பால் தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அசோக், கடப்பாரையால் பாஸ்கரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளியை தம்பியே கடப்பாரையால் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story