நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது


நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 8 Sep 2019 10:15 PM GMT (Updated: 8 Sep 2019 6:19 PM GMT)

நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீராதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆறு, கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் மொத்தம் 2½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன்காரணமாக நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 95 அடியை தாண்டியது.

இந்தநிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தற்போது மழை இல்லை. நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 5 ஆயிரத்து 594 கன அடி நீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 95.83 அடியாக இருந்தது.

நேற்று அணைக்கு நீர்வரத்து அதிரடியாக குறைந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 657 கனஅடியாக இருந்தது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.02 அடியாக உள்ளது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 1,350 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடியும் திறந்து விடப்பட்டது.

Next Story