முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு புதர்மண்டி கிடக்கும் 18-ம் கால்வாயை பராமரிக்கவேண்டும்


முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு புதர்மண்டி கிடக்கும் 18-ம் கால்வாயை பராமரிக்கவேண்டும்
x
தினத்தந்தி 8 Sep 2019 9:30 PM GMT (Updated: 8 Sep 2019 8:17 PM GMT)

முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு புதர்மண்டி கிடக்கும் 18-ம் கால்வாயில் உள்ள செடி,கொடிகளை அகற்றி, சேதமடைந்த கரைகளை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கம்பம்,

முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் லோயர்கேம்ப் முதல் பழனிச்செட்டிபட்டி வரை 14 ஆயிரத்து 707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால் கம்பம் பள்ளத்தாக்கின் மேற்கில் உள்ள கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், போடி உள்ளிட்ட பகுதிகளில் பலஆயிரம் ஹெக்டேர் நில பரப்பளவில் மானாவாரி விவசாயநிலங்கள் உள்ளன. இங்கு காய்கறிகள், சோளம், கம்பு, நிலக்கடலை, மரவள்ளிக்கிழங்கு, தென்னை, வாழை உள்ளிட்ட விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் விவசாய பாசன வசதிக்காக கடந்த 10 வருடத்திற்கு முன்பு 18-ம் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் கூடலூரில் உள்ள முல்லைப்பெரியாறு வைரவன் கால்வாய் தலைமதகில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். இதன்படி 18-ம் கால்வாய் மூலம் 44 கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு தேக்கிவைக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செழிப்படைந்தது.

இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அணையின் நேற்றைய நீர் மட்டம் 131.1 அடியாக இருந்தது. இதையடுத்து இந்த ஆண்டு வழக்கம்போல் அக்டோபர் மாதம் 18-ம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால் 18-ம் கால்வாய் பராமரிப்பின்றி இருப்பதால் பல்வேறு இடங்களில் செடி,கொடிகள் முளைத்து கால்வாயில் புதர்மண்டி கிடக்கிறது. பல்வேறு இடங்களில் கரைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன.

இதனால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்படும் போது ஆங்காங்கே கரைகள் உடைந்து தண்ணீர் வீணாக செல்ல வாய்ப்புள்ளது.

எனவே தண்ணீர் திறப்பதற்கு முன்பு புதர்மண்டி கிடக்கும் 18-ம் கால்வாயை பராமரித்து, சேதமடைந்த கரைகளை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 18-ம் கால்வாய் பாசன விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story