வேப்பூர் அருகே, வீட்டின் கதவை உடைத்து ரூ.1½ லட்சம் நகை-பணம் கொள்ளை


வேப்பூர் அருகே, வீட்டின் கதவை உடைத்து ரூ.1½ லட்சம் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 9 Sep 2019 10:15 PM GMT (Updated: 9 Sep 2019 6:28 PM GMT)

வேப்பூர் அருகே வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேப்பூர்,

வேப்பூர் அருகே உள்ள நிராமணி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி தேவிகா(வயது 40). இவர்களுக்கு அசோக்குமார்(20) என்ற மகன் உள்ளார். ராஜ் துபாயில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தேவிகா தனது மகனுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு தேவிகா வீட்டை பூட்டிவிட்டு தனது மகனுடன் ஜாதகம் பார்ப்பதற்காக சென்னைக்கு புறப்பட்டார். மறுநாள் காலை தேவிகாவின் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. அதைபார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி தேவிகாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அவர் தனது மகனுடன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 5 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் கொள்ளை போயிருந்தது தெரிந்தது. இதையடுத்து அவர், இச்சம்பவம் பற்றி வேப்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தேவிகா தனது மகனுடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோ பூட்டை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story