வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது


வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 9 Sep 2019 10:15 PM GMT (Updated: 9 Sep 2019 6:47 PM GMT)

கோர்ட்டிற்கு சென்று விட்டு வந்த வாலிபரை ஓட, ஓட விரட்டி கொலை செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை அருகே பனங்காடி கிராமத்தை சேர்ந்த காளையப்பன் மகன் ராஜ சேகரன் (வயது 38). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர் தாய், மகன் கொலை வழக்கு விசாரணைக்காக சிவகங்கை கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்தார். பின்பு இவர், நண்பருடன் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் வழிமறித்து, ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்தது.

இதுதொடர்பாக ராஜசேகரனின் மனைவி கல்பனா என்ற திவ்யா கொடுத்த புகாரின் பேரில் சரவணன், கண்மணி, கோவானுர் முத்து, விக்கி, அருள், பரமசிவம் உள்பட 11 பேர் மீது சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் உத்தரவின் பேரில் சிவகங்கை துணைபோலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர் மேற்பார்வையில் நகர் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார் தலைமறைவான கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று தொத்தங்குளத்தை சேர்ந்த விக்கி என்ற விக்னேஸ்வரன் (28), மானாமதுரையை சேர்ந்த மணி என்ற அருள்நாதன் (24), காளையார்கோவிலை சேர்ந்த சரவணன் (35), தேவகோட்டையை அடுத்த பப்பனிகிராமத்தை சேர்ந்த தென்னரசு (39) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைதான 4 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட ராஜசேகருடன் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகவும், அதனால் ராஜசேகரை கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story