போட்டி நாடுகளின் வர்த்தகத்தால் திருப்பூர் பின்னலாடைத்தொழில் நெருக்கடியை சந்தித்து வருகிறது - ஜி.கே.வாசன் பேட்டி


போட்டி நாடுகளின் வர்த்தகத்தால் திருப்பூர் பின்னலாடைத்தொழில் நெருக்கடியை சந்தித்து வருகிறது - ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 11 Sep 2019 11:45 PM GMT (Updated: 11 Sep 2019 8:20 PM GMT)

போட்டி நாடுகளின் வர்த்தகத்தால் திருப்பூர் பின்னலாடைத்தொழில் நெருக்கடியை சந்தித்து வருகிறது என்று த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

திருப்பூர்,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று திருப்பூருக்கு வந்தார். இந்நிலையில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாடு சுற்றுப்பயணம் எதிர்பார்த்ததை விட அதிக அளவு முதலீடுகளை ஈர்த்துள்ளது. தமிழகத்துக்கான பயன், பலன் ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது. எனவே, முதல்-அமைச்சரின் சுற்றுப்பயணம் வெற்றி சுற்றுப்பயணமாகவே அமைந்துள்ளது.

முதல்-அமைச்சர் சுற்றுப்பயணத்தில் சுமார் ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் வெளிநாடு ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளது. முதலீடுகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், கால்நடை பண்ணை, கல்வி சம்பந்தப்பட்ட பல்வேறு முக்கிய துறைகளிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. முதல்-அமைச்சரின் பயணத்திற்கு பிறகு, அதன் தொடர்ச்சியாக ஒரு குழுவை அமைத்து சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகள், முதல்-அமைச்சரோடு சென்ற தொழில்நுட்ப வல்லுனர்களை அழைத்து ஒரு கூட்டத்தை நடத்தி வெளிநாட்டு பயணத்தில் ஏற்படுத்திய நல்ல நிலையை பயன்படுத்தி கொள்வதற்காக தொழிற்சாலைகளையும், மருத்துவமனைகளையும், கல்விக்கூடங்களையும் ஒரு காலக்கெடுவுக்குள் கொண்டு வந்து வேலை வாய்ப்பினை, தமிழகத்தில் உள்ளவர்களுக்கு உறுதி செய்துகொள்ளும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.

கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் பின்லாந்து சுற்றுப்பயணம், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தக்கூடிய முயற்சிகளை செய்துக்கொண்டிருக்கிறார் என்பது பாராட்டுக்குரியது. திறன் மேம்பாட்டு பயிற்சி தமிழகத்தில் ஏற்படுத்துவதற்கு, தான் சென்ற நாடுகளில் இருந்து வல்லுநர்களை வரவழைத்து, மாணவர்கள் பயன் அடையக்கூடிய நிலையை ஏற்படுத்த போவதாக அறிவித்துள்ளார். இதனை சிறப்பாக செய்து, மாணவர்களின் வளர்ச்சியில் நல்ல அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி ஏற்றுமதி வணிகம் மூலம் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருகிறது என்பதை அனைவரும் நன்கு அறிவோம்.

தொடர்ந்து உள்நாட்டு வணிகம் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி மூலம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது இந்த பின்னலாடைத் தொழில் ஜி.எஸ்.டி மற்றும் மத்திய அரசு வழியில் வந்த ஏற்றுமதியாளருக்கான ஊக்கத்தொகை டியூட்டி டிராபேக் திரும்ப பெற்ற நிலையில், போட்டி நாடுகளின் வர்த்தகத்தால் மிகப்பெரிய சரிவை சந்திக்கக்கூடிய ஒரு நெருக்கடியான நிலையை திருப்பூர் பின்னலாடைத் தொழில் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

மத்திய அரசு காலம் தாழ்த்தாமல், தொழிற்துறையினரை அழைத்து பேசி, தொடர்ந்து உள்நாட்டு, வெளிநாட்டு ஆயத்த ஆடை வணிகத்தில் ஈடுபட ஏதுவான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் என்பது எதிர்பார்த்ததை விட அதிக முதலீடுகள் வந்து வெற்றி சுற்றுப்பயணமாக இருந்துள்ளது. முதல்-அமைச்சரின் சுற்றுப்பணத்தை குறை கூறுகிறவர்கள் யாராக இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சியில் அக்கறை காட்டாதவர்கள் என்பது தான் எங்களது கருத்து. இவ்வாறு கூறினார்

பேட்டியின் போது மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார், மாநில பொதுச்செயலாளர்கள் மோகன் கார்த்திக், விடியல் சேகர், மாநில செயலாளர் சேதுபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக த.மா.கா. மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமையில் ஜி.கே.வாசனுக்கு வரவேற்பு சிறப்பாக கொடுக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story