அரசு முடிவுகளை செயல்படுத்த எதிர்ப்பு மக்களின் தேவைகளை அதிகாரிகள் உணர்வதில்லை, முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு


அரசு முடிவுகளை செயல்படுத்த எதிர்ப்பு மக்களின் தேவைகளை அதிகாரிகள் உணர்வதில்லை, முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 Sep 2019 11:00 PM GMT (Updated: 11 Sep 2019 9:18 PM GMT)

அரசு எடுக்கும் முடிவுகளை செயல்படுத்த மறுப்பதுடன் மக்களின் தேவைகளை அதிகாரிகள் உணர்வதில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

“தாக்குதலுக்கு ஆளாகக் கூடிய இந்திய நிலப்படத் தொகுப்பு, பேரழிவு தடுப்பு வடிவமைப்பு மற்றும் கட்டுமான நடைமுறைகள்” என்ற தலைப்பில் ஒருநாள் பயிலரங்கம் புதுச்சேரி ஓட்டல் அக்கார்டில் நேற்று நடைபெற்றது. புதுச்சேரி அரசு நகர மற்றும் கிராம அமைப்புத்துறை, புதுச்சேரி நகர அமைப்பு குழுமம், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி கட்டுமான பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப ஊக்குவிப்பு கழகம் ஆகியவை இணைந்து இந்த பயிலரங்கை நடத்தின.

இதன் தொடக்க விழாவிற்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் முன்னிலை வகித்தார். டெல்லி கட்டுமான பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப ஊக்குவிப்பு கழக நிர்வாக இயக்குனர் ஷைலேஷ் அகர்வால் வரவேற்றார்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி பயிலரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப் படக்கூடிய பகுதியாக உள்ளது. 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது 13, 14 அடி உயரத்திற்கு கடலில் அலை எழுந்து கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. இதன் காரணமாக 590 பேர் உயிர் இழந்தனர். அப்போது பல தன்னார்வ அமைப்பினரும், புதுச்சேரி அரசு முகவர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த முறையில் உதவி புரிந்தனர்.

அடுத்து வந்த தானே புயலின்போது புதுச்சேரியின் பசுமை அழிந்தது. கஜா புயலின்போது தமிழகத்தின் 13 மாவட்டங்களும், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டமும் பாதிக்கப்பட்டது. புதுச்சேரி அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

எதிர்மறை செயல்

புதுவை, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகளில் வெள்ளம், புயல், நில நடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மாகி பகுதி கன மழையால் பாதிக்கப்படுகிறது. எனவே இவைகளை தாங்கக்கூடிய கட்டிடங்களை புதிய தொழில்நுட்பத்தில் கட்ட வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை நாம் செயல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். ஆனால் மத்திய அரசு நமக்கு உதவுவது இல்லை.

புதுச்சேரியில் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக உள்ளது. புதுச்சேரி மேலும் வளர உதவ வேண்டிய மத்திய அரசு, எதிர்மறையாக செயல்பட்டு வருகின்றது. மாநிலங்கள் வளர்ச்சி பெற்றால்தான் நாடு வளர்ச்சி அடையும். மத்திய நகர்ப்புற மேம்பாட்டு குழுமத்தின் தவறான நடவடிக்கையால் நாடு முழுவதும் நிலவணிகம் சீர்குலைந்துள்ளது. கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. கருப்புப்பண நடமாட்டத்தை தடுப்பதாகக்கூறி ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலை நிறுத்தியுள்ளது. இதனால் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள்தான்.

புதுச்சேரியில் கட்டிடங்கள் கட்ட அனுமதி பெறுவதற்கு புதுச்சேரி நகர திட்ட குழு மத்திற்கு மக்கள் பல முறை வந்து அலைய வேண்டி யுள்ளது. இதற்கு அதிகாரிகள்தான் காரணம். பலமுறை அதிகாரிகளை அழைத்து பேசியும் அவர்கள் மக்கள் நலனுக்கு விரோதமாகவே செயல்படுகின்றனர். பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினால் நகரம் எப்படி வளர்ச்சி பெறும்? மாநிலம் எப்படி வளர்ச்சி பெறும்? மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுதான் நமது கடமை என்று அதிகாரிகள் உணர்வதில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவுகளை செயல்படுத்த அதிகாரிகள் மறுக்கின்றனர். இவ்வாறு இருந்தால் மாநிலமும், நாடும் வளர்ச்சி பெறாது. இதனை உணர்ந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும். புதுவையில் இயற்கை பேரழிவுகளை தாங்கும் கட்டிடங்களை கட்ட வேண்டும். அதற்கு இந்த பயிற்சி முகாம் உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, வெங்கடேசன், மத்திய அரசு செயலாளர் துர்கா ஷங்கர் மிஸ்ரா, புதுச்சேரி தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், வீட்டு வசதி வாரிய தலைவர் அசோக் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில், வெள்ளத்தை தாங்கக்கூடிய வீடுகள் கட்டுவது குறித்து இந்திய தொழில்நுட்ப நிறுவன பேராசிரியர் கோயல், காற்று மற்றும் சூறாவளியை தாங்கக்கூடிய கட்டுமானம் குறித்து முன்னாள் விஞ்ஞானி செல்விராஜன், நிலநடுக்கத்தை தாங்கக்கூடிய வீடுகள் குறித்து இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த கட்டுமானத் துறை பேராசிரியர் மெஹர் பிரசாத் ஆகியோர் பேசினர். பயிலரங்கில் அரசு துறை அதிகாரிகள், என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story