காரைக்காலில் இருந்து சரக்கு ரெயிலில் தஞ்சை வந்தது: சம்பா சாகுபடிக்காக 1,960 டன் யூரியா உரம்


காரைக்காலில் இருந்து சரக்கு ரெயிலில் தஞ்சை வந்தது: சம்பா சாகுபடிக்காக 1,960 டன் யூரியா உரம்
x
தினத்தந்தி 12 Sep 2019 10:15 PM GMT (Updated: 13 Sep 2019 12:12 AM GMT)

காரைக்காலில் இருந்து சரக்கு ரெயிலில் சம்பா சாகுபடிக்காக தஞ்சைக்கு 1,960 டன் யூரியா உரம் வந்தது. இந்த உரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். அப்படி திறக்கப்பட்டால் அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படும். இல்லையென்றால் ஆழ்குழாய் கிணறு மூலம் குறைந்த பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படும்.

இதற்கு தேவையான விதை நெல், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்படாததால் ஆழ்குழாய் கிணறு மூலம் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது குறுவை அறுவடை பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு தேவையான உரங்கள், விதை நெல் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு விவ சாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி காரைக்கால் துறைமுகத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 1,960 டன் யூரியா உரம் நேற்று தஞ்சை ரெயில் நிலையத்திற்கு வந்தது. 31 வேகன்களில் வந்த இந்த உர மூட்டைகள், லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story