ஜேடர்பாளையம் படுகை அணை, ராஜா வாய்க்காலில் தடையை மீறி குளித்தால் கடும் நடவடிக்கை - பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை


ஜேடர்பாளையம் படுகை அணை, ராஜா வாய்க்காலில் தடையை மீறி குளித்தால் கடும் நடவடிக்கை - பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 Sep 2019 10:45 PM GMT (Updated: 13 Sep 2019 7:46 PM GMT)

பரமத்தி வேலூர் வட்டம் ஜேடர்பாளையம் படுகை அணை மற்றும் ராஜா வாய்க்காலில் தடையை மீறி குளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித் துறையினர் எச்சரித்து உள்ளனர்.

பரமத்தி வேலூர்,

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் பரமத்தி வேலூரை அடுத்துள்ள ஜேடர்பாளையம் படுகை அணை காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

ஏற்கெனவே பொதுப்பணித்துறையினர் மற்றும் போலீசார் படுகை அணை பகுதியில் காவிரி மற்றும் ராஜா வாய்க்கால் பகுதிகளில் பொதுமக்கள் குளிக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் நண்பர்களுடன் சுற்றுலா வந்த ஈரோட்டை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுவரை அவரை கண்டு பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில தினங்களுக்கு முன்பு பரமத்தி வேலூரில் காவிரி ஆற்றில் குளித்த முதியவர் ஒருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற 3 இளைஞர்களும் காவிரியில் அடித்துச் செல்லப்படனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் முதியவர் உட்பட 4 பேரையும் உயிருடன் மீட்டனர்.

நேற்று முன்தினம் ஜேடர்பாளையம் அருகே உள்ள அரசம்பாளையம் காவிரி ஆற்றில் குளித்த இளைஞர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இதனால் தற்போது ஜேடர்பாளையம் படுகையில் உள்ள அண்ணா பூங்காவிற்கு மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். படுகை அணை பகுதிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் காவிரி ஆறு மற்றும் ராஜா வாய்க்காலில் குளிப்பதற்கு பொதுப்பணித்துறையினர் தடைவிதித்து எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். தடையை மீறி குளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரித்து உள்ளனர். காவிரி படுகை அணை பகுதிகளில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story