கிழக்கு கடற்கரை சாலைக்கு சூட்டப்பட்ட: எம்.ஜி.ஆர். பெயரை மாற்றினால் சட்டசபையை முற்றுகையிடுவேன் - ஓம்சக்தி சேகர் எச்சரிக்கை


கிழக்கு கடற்கரை சாலைக்கு சூட்டப்பட்ட:  எம்.ஜி.ஆர். பெயரை மாற்றினால் சட்டசபையை முற்றுகையிடுவேன் - ஓம்சக்தி சேகர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Sep 2019 12:00 AM GMT (Updated: 14 Sep 2019 12:00 AM GMT)

கிழக்கு கடற்கரை சாலைக்கு சூட்டப் பட்ட எம்.ஜி.ஆர். பெயரை மாற்றினால் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவேன் என்று முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் எச்சரிக்கை விடுத்தார்.

புதுச்சேரி,

புதுவை 100 அடி சாலைக்கு பாரத ரத்னா எம்.ஜி.ஆர். சாலை என்று ஏற்கனவே பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், அதை பெயர் மாற்றம் செய்யும் காங்கிரஸ் அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் அறிவித்திருந்தார். அதன்படி சாரம் பாலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஓம்சக்தி சேகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது ஓம்சக்தி சேகர் பேசியதாவது:-

புதுவையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முதலில் புறவழிச்சாலை சிறியதாக அமைக்கப்பட்டது. சிவாஜி சிலை முதல் ராஜீவ்காந்தி சிலை, இந்திராகாந்தி சிலை, மரப்பாலம் வரை அந்த சாலைக்கு பாரத ரத்னா எம்.ஜி.ஆர். சாலை என்று அப்போதைய முதல்-அமைச்சர் ஜானகிராமன் பெயர் சூட்டினார்.

புதுவை பஸ் நிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவின்போது இதற்கான அறிவிப்பினை வெளியிட்டார்.

இதற்கான பெயர் பலகையும் அந்த சாலையில் வைக்கப்பட்டது. காலப்போக்கில் 4 வழிச்சாலையாக மாறியதால் அந்த பெயர்ப் பலகை அகற்றப்பட்டது. சென்னை- நாகப்பட்டினம் வரை செல்லும் அந்த சாலைக்கு கிழக்கு கடற்கரை சாலை என்று பெயர் சூட்டப்பட்டது.

ஆனால் புதுவையில் அந்த சாலை எம்.ஜி.ஆர். சாலை என்றே அழைக்கப்பட்டு வந்தது. நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது அதற்கு உரிய அங்கீகாரம் கொடுக்கவேண்டும் என்றும் ரெயில்வே மேம்பாலத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டவும் வலியுறுத்தினேன்.

1986-ம் ஆண்டு தற்போதைய முதல்-அமைச்சர் நாராயணசாமி எம்.பி.யாக அடிப்படை அமைத்துக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். எனவே முதல்-அமைச்சர் நாராயணசாமி இதை உதாசீனப்படுத்தக் கூடாது. ஏறிய ஏணியை எட்டி உதைக்கக் கூடாது.

எனவே உடனடியாக அரசாணையை மாற்றி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சாலை என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும். இல்லை என்றால் முதல்-அமைச்சர் வீடு அல்லது சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவேன். அதற்காக எனது உயிரையும் கொடுப்பேன். எம்.ஜி.ஆர். பெயரை மாற்றியமைத்தால் கடும் விளைவினை சந்திக்க நேரிடும்.

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் முன்பு வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்றார்கள். ஆனால் 10 ஆயிரம் பேரை வேலையைவிட்டு நீக்கினார்கள். அரசு சார்பு நிறுவனங்களில் 12 ஆயிரம் பேருக்கு சம்பளமில்லை. நெல்லித்தோப்பு தொகுதியில் விபசாரம், கஞ்சா, தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை கொடிகட்டி பறக்கிறது. நாள்தோறும் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் தொடர்கிறது. இவ்வாறு ஓம்சக்தி சேகர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, காசிநாதன், துணை செயலாளர்கள் பெரியசாமி, கோவிந்தம்மாள், வெங்கடசாமி, செயற்குழு உறுப்பினர் இந்திரா முனுசாமி, மாசிலா குப்புசாமி, ஊசுடு செல்வராஜ், பொன்.ரங்கநாதன், லட்சுமணன், மாணவர் அணி சரவணன், வக்கீல்கள் அணி குணசேகரன், தொகுதி செயலாளர்கள் கணேசன், மணி, மணவாளன், சக்கரவர்த்தி, கணேசன், மகளிர் அணி மீனா, பொதுக்குழு உறுப்பினர்கள் நந்தன், பழனிச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story