பனைமர விதைகள் வினியோகத்திற்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு - கலெக்டர் தகவல்


பனைமர விதைகள் வினியோகத்திற்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 14 Sep 2019 10:30 PM GMT (Updated: 14 Sep 2019 2:03 PM GMT)

பனைமர விதைகள் வினியோகத்திற்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– வேளாண் உற்பத்தியினை உயர்த்துவதற்கும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தற்போது அரசு பனை மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழ்நாட்டில் அவற்றின் சாகுபடியினை உயர்த்தி, பனை மரங்களை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கத்தில், நிலத்தடி நீரை பாதுகாக்கும் பாதுகாவலனாக விளங்கும் பனை மரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. வறட்சி மிகுந்த மானாவாரி மற்றும் கடற்கரை பகுதிகளில் பனை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்–அமைச்சர் அறிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் மாவட்டத்தில் காளையார்கோவில் வட்டாரத்தில் நாட்டரசன்கோட்டை, தேவகோட்டை வட்டாரத்தில் நாகாடி, கண்ணங்குடி வட்டாரத்தில் அனுமந்தங்குடி, இளையான்குடி வட்டாரத்தில் விசவனூர் மற்றும் கல்லல் வட்டாரத்தில் அ.சிறுவயல் ஆகிய பகுதிகளில் தலா 50 ஆயிரம் பனை விதைகள் வீதம் 2½ லட்சம் பனை விதைகள் வினியோகத்திற்காக ரூ.10 லட்சம் நிதியினை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.

பொதுவாக பனைமரம் தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமைக்குரியது. பனை மரத்தின் வேர், தூர்ப்பகுதி, நடுமரம், பத்தை மட்டை, உச்சிப்பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளைபீலி, பனங்காய், பச்சை மட்டை, சாரை ஓலை, குருத்தோலை என அனைத்து பாகங்களுமே பயன்தரக்கூடியது. இந்த காரணங்களாலேயே பனைக்கு கற்பக விருட்சம் என்று நம் முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர்.

இந்த மரத்திலிருந்து கிடைக்கும் பதநீர் ஆரோக்கியமான பானம் ஆகும். நுங்கும், பனங்கிழங்கும் உணவாக பயன்படுகின்றன. இவற்றின் ஓலை, கூடைகள் தயாரிக்கவும் கைவினைப் பொருட்கள் செய்யவும், வீட்டின் கூரைக்காகவும் பயன்படுகிறது. தண்டுப்பகுதி வீடு கட்ட பயன்படுகிறது. பனஞ்சாறு கற்கண்டாகவும், கருப்பட்டியாகவும் தயாரிக்கப்பட்டு தமிழர் உணவு பழக்கத்தில் ஆரோக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது.

இதேபோன்று மானாவாரி நிலங்களை பசுமை போர்வை போன்று மாற்றும் வகையில், நடப்பாண்டில் எக்டருக்கு ரூ.100 மதிப்புள்ள வாகை, தேக்கு, புளி, வேம்பு, இலுப்பை, மகாகனி, ஈட்டி போன்ற பலன்தரும் மரங்களின் கன்றுகளும் இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மரங்களின் கன்றுகள் வினியோகத்திற்காக ரூ.5 லட்சம் நிதியினை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. மானாவாரி விவசாயிகளின் நலனுக்காக மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தில் பனை மற்றும் இதர பயன்தரும் மரக்கன்றுகளைப் பெற்று விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story