பள்ளிப்பட்டு அருகே 823 கிலோ வெடிபொருட்களை பதுக்கி வைத்த குடோனுக்கு ‘சீல்’ - மேலாளர் கைது


பள்ளிப்பட்டு அருகே 823 கிலோ வெடிபொருட்களை பதுக்கி வைத்த குடோனுக்கு ‘சீல்’ - மேலாளர் கைது
x
தினத்தந்தி 14 Sep 2019 11:00 PM GMT (Updated: 14 Sep 2019 4:24 PM GMT)

பள்ளிப்பட்டு அருகே கல்குவாரி பாறைகளை உடைக்க பயன்படும் வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோன் மேலாளரை போலீசார் கைது செய்து, குடோனுக்கு சீல் வைத்தனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம் எஸ்.கே.வி.கண்டிகை கிராமம் அருகே ஆந்திர மாநில எல்லை உள்ளது. இங்கு அமைந்துள்ள கல்குவாரியை வேலூர் மாவட்டம் சோளிங்கர் திருக்குளம்மேடு பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 46) என் பவர் குத்தகைக்கு எடுத் து நடத்திவருகிறார். இந்த நிலையில், கல்குவாரியில் உள்ள பாறைகளை உடைக்க பயன்படும் வெடிபொருட்களை தமிழக எல்லையில் உள்ள குடோன் ஒன்றில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், மண்டல துணை தாசில்தார் மலர்விழி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்றனர்.

அதன்பின்னர், அங்கிருந்த குடோனில் அவர்கள் சோதனை செய்தனர். அப்போது அங்கு பாறைகளை வெடிக்க வைக்க உதவும் வெடிமருந்துகள் 90 பெட்டிகளிலும், டெட்டனேட்டர் வெடிபொருட்கள் 3 பெட்டிகளிலும் என மொத்தம் 823 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அந்த குடோனுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

மேலும், வெடிபொருட்களை பதுக்கி வைத்த கட்டாரிகுப்பம் கிராமத்தை சேர்ந்த குடோன் மேலாளரான வேணு (26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள குடோனின் உரிமையாளர் பெருமாளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story