திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தப்பிய நைஜீரிய வாலிபர் டெல்லியில் கைதானது எப்படி? பரபரப்பு தகவல்கள்


திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தப்பிய நைஜீரிய வாலிபர் டெல்லியில் கைதானது எப்படி? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 14 Sep 2019 11:15 PM GMT (Updated: 14 Sep 2019 7:24 PM GMT)

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தப்பிய நைஜீரிய வாலிபர் டெல்லியில் கைதானது எப்படி? என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருச்சி,

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை தமிழர்கள், வங்காள தேசத்தினர், நைஜீரியர்கள் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் போலி பாஸ்போர்ட்டு வழக்கில் கைதான நைஜீரிய நாட்டை சேர்ந்த ஸ்டீபன் பால் அப்புச்சியும் (வயது 30) முகாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறப்பு முகாமில் இருந்து கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி அவர் தப்பிச்சென்றார். இது தொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சகாயஅன்பரசு தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். தப்பியோடிய நைஜீரிய வாலிபர் பெங்களூரு, ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் பதுங்கி இருப்பதாக அவ்வப்போது தகவல் வந்தது. தனிப்படை போலீசார் அந்த இடங்களுக்கு சென்ற போது அவர் தப்பியோடியபடி இருந்தார்.

கொள்ளை கும்பல்

இந்த நிலையில் ஸ்டீபன் பால் அப்புச்சி டெல்லியில் பதுங்கியிருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று முன்தினம் டெல்லியில் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். சினிமா பட பாணியில் போலீசார், அவரை விடாமல் மாநிலம் விட்டு மாநிலம் விரட்டிச் சென்று பிடித்தனர். இந்த நிலையில் ஸ்டீபன் பால் அப்புச்சி கைதானது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து போலீசார் கூறியதாவது:-

தப்பியோடிய நைஜீரிய வாலிபருக்கு சென்னை புழல் சிறையில் ராஜஸ்தான் மாநில கொள்ளையன் நாதுராம் உடன் பழக்கம் இருந்துள்ளது. அந்த கும்பலுடன் ஸ்டீபன் பால் அப்புச்சி தொடர்பில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் சென்றிருக்கலாம் என தனிப்படையினர் கருதினர். அங்கு சென்று அந்த கும்பலிடம் விசாரித்தபோது, அவர் அங்கு வந்தது உறுதியானது. அங்கிருந்து அவர் ஐதராபாத் தப்பிச்சென்றார். தனிப்படை போலீசார் ஐதராபாத் சென்றபோது அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்தார். தனிப்படை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதற்கிடையில் தான் நாதுராம் கொள்ளை கும்பலில் ஒருவரிடம் ஸ்டீபன் பால் அப்புச்சி செல்போனில் பேசிய தகவல் கிடைத்தது.

நாளை திருச்சிக்கு...

இதைத்தொடர்ந்து அந்த தகவலை வைத்து விசாரித்தபோது அவர் டெல்லியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அங்குள்ள போலீசார் உதவியுடன் அவரை தனிப்படையினர் பிடித்தனர். அவரை கைது செய்து டெல்லியில் இருந்து திருச்சிக்கு ரெயிலில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வர உள்ளனர். நாளை (திங்கட்கிழமை) அவர் திருச்சிக்கு அழைத்து வரப்படலாம் என்று தெரிகிறது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் முகாமில் அடைக்கப்படுவார். இந்த வழக்கில் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், வெளிமாநில போலீஸ் உயர் அதிகாரிகளுடன் அவ்வப்போது தொடர்பு கொண்டு பேசி தகவல்களை பரிமாறி வந்தார். மேலும் அவரது நேரடி மேற்பார்வையால் வெளிமாநில போலீசாரின் உதவியும் திருச்சி போலீசாருக்கு கிடைத்தது.

இதன் அடிப்படையில் நைஜீரிய வாலிபர் சிக்கினார். அவர் சிறப்பு முகாமில் இருந்து மரங்களில் ஏறி சுற்றுச்சுவரை தாண்டி தப்பிச்சென்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அவரிடம் வாக்குமூலம் பெற்ற பின்பு தான் அவர் தப்பிச்சென்றது எப்படி? அவருக்கு வேறு யாரும் சிறப்பு முகாமில் உதவினார்களா? வெளியில் சென்ற பின் யார்? யார்? உதவினார்கள் என்ற விவரம் தெரியவரும். அவர் துப்பாக்கி வைத்திருப்பது போல அவரது முகநூலில் புகைப்படம் இருந்தது. அந்த துப்பாக்கி பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Next Story