ஐகோர்ட்டு கண்டனம் எதிரொலி: திருச்சியில் அரசியல் கட்சியினரின் ‘பேனர்’கள் அகற்றம்


ஐகோர்ட்டு கண்டனம் எதிரொலி: திருச்சியில் அரசியல் கட்சியினரின் ‘பேனர்’கள் அகற்றம்
x
தினத்தந்தி 14 Sep 2019 11:00 PM GMT (Updated: 14 Sep 2019 7:32 PM GMT)

ஐகோர்ட்டு தெரிவித்த கண்டனம் எதிரொலியாக திருச்சியில் அரசியல் கட்சியினரின் ‘பேனர்’கள் அகற்றப்பட்டன.

திருச்சி,

சென்னை பள்ளிக்கரணையில் ‘பேனர்’ சரிந்து மொபட்டில் சென்ற பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ மீது விழுந்ததில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் அவர் மீது தண்ணீர் லாரி ஏறி இறங்கியதில் சுபஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் பொதுமக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பேனர் வைக்க கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் சாலையில் நடுவே வைக்கப்பட்ட ‘பேனர்’ சரிந்து விழுந்ததில் பெண் பலியான சம்பவத்திற்கு சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் மெத்தன போக்குடன் செயல்படுவதாக அதிகாரிகளுக்கும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இதற்கிடையில் தமிழகத்தில் ஐகோர்ட்டு மற்றும் அரசின் உத்தரவுகளை மீறி ‘பேனர்’ வைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் கண்காணிக்கவும் அரசு அறிவுறுத்தியது.

பேனர்கள் அகற்றம்

இந்த நிலையில் ஐகோர்ட்டு கண்டனம் எதிரொலியாக திருச்சி மாநகர பகுதியில் சாலையோரம் மற்றும் சாலையின் தடுப்பு சுவர் அருகே ஆங்காங்கே அரசியல் கட்சியினர் வைத்திருந்த பேனர்களை தாங்களாகவே நேற்று அகற்ற தொடங்கினர். அங்கிருந்த ‘பேனர்’களை கழற்றி கொண்டு சென்றனர்.

இதேபோல சில இடங்களில் சாலையோரம் இருந்த பொதுவான விளம்பர பேனர்களை அந்தந்த பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். உரிய அனுமதியின்றி ‘பேனர்’ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதனால் மாநகர பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி ‘பேனர்’ வைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளனர். இதேபோல மாவட்ட பகுதிகளிலும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story