5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு வரவேற்கத்தக்கது அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேட்டி


5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு வரவேற்கத்தக்கது அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேட்டி
x
தினத்தந்தி 14 Sep 2019 11:00 PM GMT (Updated: 14 Sep 2019 7:49 PM GMT)

5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் மற்றும் பூங்காக்களின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தலைமை தாங்கினார். தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்துகொண்டு புதிய கட்டிடங்கள் மற்றும் பூங்காக்களை திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கல்வித்துறையில் மாபெரும் புரட்சியை தமிழக அரசு செய்து வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக கல்வித்துறை அமைச்சர் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

கல்வி தரம் உயரும்

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்து உள்ளது வரவேற்கத்தக்கது. அப்போது தான் தமிழகத்தின் கல்வி தரம் உயரும். சிறு வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு சட்டத்திற்கு ஆதரவு அளித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்தது தி.மு.க தான். இந்தியா பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு எழும். மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்திய நாட்டின் பொருளாதாரம் நன்றாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதில் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் கனகசபாபதி, மாவட்ட வழங்கல் அலுவலர் பூங்கொடி, இயக்குனர்(கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி) தங்க.கதிரவன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story