விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,898 வழக்குகளுக்கு தீர்வு


விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,898 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 14 Sep 2019 11:15 PM GMT (Updated: 14 Sep 2019 8:24 PM GMT)

விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,898 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான ஆனந்தி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். நீதிபதிகள் சுஜாதா, சங்கர், கார்த்திக், அருணாச்சலம், கோபிநாதன், ராமகிருஷ்ணன், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி சாரா கடன் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் விசாரணை செய்யப்பட்டன. இதில் நிலுவையில் உள்ள வழக்குகளாக 8,933 வழக்குகளும், நிலுவையில் இல்லாத வழக்குகளாக 1,295 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இம்முகாமில் நீதிபதிகள் செங்கமலச்செல்வன், அருண்குமார், முத்துக்குமாரவேல், கவிதா, உத்தமராஜ், ஆயுஸ்பேகம், ஓய்வுபெற்ற நீதிபதி முருகபூபதி, வக்கீல்கள் ரகீம்ஷெரீப், ரத்தினசபாபதி, வேலவன், நீலமேகவண்ணன், நடராஜன், கருணாமூர்த்தி, வெங்கடாஜலபதி, சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டு வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு கண்டனர்.

இதன் முடிவில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 1,573 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.10 கோடியே 83 லட்சத்து 72 ஆயிரத்து 694-க்கு தீர்வு காணப்பட்டது. இதேபோல் நிலுவையில் இல்லாத வழக்குகளில் 325 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.4 கோடியே 19 லட்சத்து 54 ஆயிரத்து 284-க்கு தீர்வு காணப்பட்டது.

Next Story