செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 15 Sep 2019 10:30 PM GMT (Updated: 15 Sep 2019 4:08 PM GMT)

திருப்பூரில் செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர்,

திருப்பூர் பவானி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 42). இவருடைய மகன் சக்திவேல்(18). இவர் காங்கேயத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சக்திவேல் கல்லூரிக்கு சென்று விட்டு அடிக்கடி மாலையில் தாமதமாக வீடு திரும்பியுள்ளார். மேலும் செல்போனை எப்போதும் வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்துள்ளார். இதை ராஜேந்திரன் கண்டித்துள்ளார்.

ஆனால் சக்திவேல் கேட்காமல் தொடர்ந்து வீட்டில் இருந்தபோதும் செல்போனில் விளையாடி நேரத்தை கழித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த ராஜேந்திரன் சம்பவத்தன்று சக்திவேலை கண்டித்ததுடன் அவரிடம் இருந்து செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டதாக தெரிகிறது. இதனால் சக்திவேல் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த சக்திவேல் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று மாணவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செல்போனில் விளையாடியதை கண்டித்ததுடன், செல்போனை தந்தை பிடுங்கி வைத்துக்கொண்டதால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story