இந்தி மொழி குறித்து மத்திய மந்திரி கருத்து: இந்தியாவை பிளவுபடுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது திருநாவுக்கரசர் எம்.பி. குற்றச்சாட்டு


இந்தி மொழி குறித்து மத்திய மந்திரி கருத்து: இந்தியாவை பிளவுபடுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது திருநாவுக்கரசர் எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 Sep 2019 11:15 PM GMT (Updated: 15 Sep 2019 4:17 PM GMT)

இந்தி மொழி குறித்து மத்திய மந்திரி தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த திருநாவுக்கரசர் எம்.பி., இதன்மூலம் இந்தியாவை பிளவுபடுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

புதுக்கோட்டை,

தலைவர்களின் பெயரில் பேனர் வைப்பதால் மக்களிடம் நன்மதிப்பை பெற முடியாது. பண மதிப்பை மட்டுமே காட்ட முடியும். தமிழக அரசு சட்டம் இயற்றி பேனர் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே மொழி என்ற ரீதியில், இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா கருத்து தெரிவித்து உள்ளது கண்டனத்துக்குரியது.

இதேபோல இந்தியா முழுவதும் ஒரே ரேஷன் என்ற மத்திய அரசின் அறிவிப்பால் ஒன்றாக உள்ள இந்தியாவை பல்வேறு துண்டுகளாக பிளவுபடுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. மத்திய அரசுக்கு பெரும்பான்மை இருப்பதால் ஆர்.எஸ்.எஸ்.ன் கொள்கையை புகுத்த நினைக்கிறது. இந்தி மொழியை ஆட்சி மொழியாக ஆக்கியது காங்கிரஸ் தான் என்று பா.ஜ.க.வினர் கூறுகின்றனர்.

கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும்

அமித்ஷா கூறிய கருத்தைத்தான் கடந்த காலங்களில் ப.சிதம்பரம் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இது யார் செய்திருந்தாலும் தவறு தான். ப.சிதம்பரம் அவ்வாறு கூறினாரா என்று எனக்கு தெரியாது. ஆனால், அது உண்மை என்றால் தவறுதான். ஒரே நாடு ஒரே மொழியை கொண்டுவர மத்திய அரசு முயல்கிறது. அப்படி என்றால் இலக்கணம் உள்ள தொன்மையான மொழி இந்தியாவில் தமிழ் மொழிதான். எனவே தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவிப்பார்களா?

5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் என்ற அறிவிப்பு தேவையற்றது. தேர்வுகள் மாணவர்களை மேம்படுத்த மட்டுமே இருக்க வேண்டும். இதுபோன்ற தேர்வுகள் மாணவர்களின் மேற்படிப்பை பாதிக்கும். ஏற்கனவே இருக்கும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முறையே போதுமானது. பொதுவாக கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.

வெற்றி பயணமா?

தமிழக முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் 6 மாத காலத்திற்கு பிறகே அது வெற்றி பயணமா என்பதை முடிவு செய்ய முடியும். இந்திய பொருளாதாரம் கடும் சரிவில் உள்ளது. பொருளாதார மேதைகளின் கருத்தை ஏற்று மாற்றங்கள் கொண்டு வந்தால் மட்டுமே சரிவிலிருந்து மீள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story