ஒப்பந்த தொழிலாளர்களின் தினக்கூலியை உயர்த்தக்கோரி 10-ந் தேதி மறியல் போராட்டம்


ஒப்பந்த தொழிலாளர்களின் தினக்கூலியை உயர்த்தக்கோரி 10-ந் தேதி மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 15 Sep 2019 11:00 PM GMT (Updated: 15 Sep 2019 4:40 PM GMT)

ஒப்பந்த தொழிலாளர்களின் தினக்கூலியை உயர்த்தக்கோரி வருகிற 10-ந் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டல குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர்,

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி மண்டல குழு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. இதற்கு மாநில துணை தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். பெரம்பலூர் வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். மாநில துணை தலைவர் ராஜாராமன், திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிபவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தினக்கூலி ரூ.380 அரசு வழங்கிடக்கோரி அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதி திருச்சி மண்டல மின்வாரிய அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும்.

காலிப்பணியிடங்களை...

மின்வாரியத் துறை பொதுத்துறையாக தொடர்ந்திட, மண்டல அளவில் மின்நுகர்வோர்கள், தொழிலாளர்கள், விவசாய தொழிலாளிகள் பங்கேற்கும் கருத்தரங்கம் நவம்பர் மாதம் 23-ந் தேதி திருச்சியில் நடத்தப்படவுள்ளது. புதிய பகுதிநேர துப்புரவு பணியாளர்களுக்கு பணி நிரந்தர உத்தரவை அரசு விரைந்து வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் மின்வாரிய துறையினருக்கு வழங்கவேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மின்ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பெரம்பலூர் வட்ட பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.

Next Story