திருச்சியில் பரபரப்பு இலங்கை விமானத்தின் என்ஜினில் பறவை மோதி சிக்கியது பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்


திருச்சியில் பரபரப்பு இலங்கை விமானத்தின் என்ஜினில் பறவை மோதி சிக்கியது பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 15 Sep 2019 11:15 PM GMT (Updated: 15 Sep 2019 6:35 PM GMT)

திருச்சிக்கு வந்த இலங்கை விமானத்தின் என்ஜினில் பறவை மோதி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 146 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

செம்பட்டு,

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து தினமும் காலை 8.40 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சிக்கு வரும். பின்னர் திருச்சியில் இருந்து மீண்டும் காலை 9.40 மணிக்கு பயணிகளுடன் கொழும்புக்கு புறப்பட்டு செல்லும். நேற்று காலை வழக்கம்போல் இந்த விமானம் கொழும்பில் இருந்து 146 பயணிகளுடன் திருச்சி விமானநிலையத்துக்கு வந்து கொண்டு இருந்தது.

விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமானத்தின் வலதுபுற இறக்கையில் உள்ள என்ஜின் பகுதியில் பறவை ஒன்று திடீரென மோதியது. அது, என்ஜினின் முன்பகுதியில் சுழலும் ராட்சத விசிறியில் சிக்கிக்கொண்டது.

பத்திரமாக தரையிறக்கம்

இதை அறிந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே விமானத்தை பத்திரமாக தரையிறக்கும்படி கட்டுப்பாட்டுஅறையில் இருந்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். பின்னர் 146 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

மேலும் இதுகுறித்து கொழும்பில் உள்ள அந்த விமான நிறுவன தலைமை அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து தொழில்நுட்ப குழுவினர் மற்றொரு விமானத்தில் திருச்சி வந்தனர். அவர்கள் விமான என்ஜினில் சிக்கி பலியான பறவையின் உடல் பாகங்களை அகற்றி, என்ஜினை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி இரவிலும் நீடித்தது.

பயணிகள் உயிர் தப்பினர்

இதற்கிடையே காலை 9.40 மணிக்கு இந்த விமானத்தில் கொழும்பு செல்வதற்காக 142 பயணிகள் திருச்சி விமானநிலையத்தில் காத்து இருந்தனர். ஆனால் அந்த விமானத்தில் பறவை மோதியதால் அவர்களால் செல்ல முடியவில்லை. இதையடுத்து நேற்று பகல் மாற்று விமானத்தில் 62 பயணிகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

40 பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டு வீடுகளுக்கு திரும்பினர். மீதமுள்ள 40 பயணிகள் விபத்துக்குள்ளான விமானத்தை சரி செய்த பிறகு அதில் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் பறவை மோதிய பிறகும் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியதால் 146 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

Next Story