காவிரி நீர் வீணாவதை தடுக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும் ஜி.கே.மணி பேட்டி


காவிரி நீர் வீணாவதை தடுக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும் ஜி.கே.மணி பேட்டி
x
தினத்தந்தி 15 Sep 2019 10:45 PM GMT (Updated: 15 Sep 2019 6:57 PM GMT)

காவிரி நீர் வீணாவதை தடுக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும் ஜி.கே.மணி பேட்டி.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், காடுவெட்டி கிராமத்தில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க.வின் முக்கிய தலைவரான குருவிற்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தின் திறப்பு விழாவிற்கான பணிகளை ஆய்வு செய்ய வந்த பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி ஜெயங்கொண்டத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் வறட்சியை போக்க கோதாவரி, காவிரி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தாமிரபரணி, காவிரி, வைகை, பாலாறு, தென்பெண்ணை என அனைத்து ஆறுகளையும் பாதுகாப்பதற்கு அன்புமணி ஏற்கனவே பிரசாரம் மேற்கொண்டார். நீர் மேலாண்மையில் பாட்டாளி மக்கள் கட்சி அதிக அக்கறை கொண்டுள்ளது. மழைநீர் சேகரிப்புக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீர் மேலாண்மைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். காவிரி நீர் வீணாவதை தடுக்க ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். முதல்- அமைச்சரின் வெளிநாடு பயணம் மேற்கொண்டதில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதை பா.ம.க. வரவேற்கிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. வீணாக கடலில் கலக்காமல் அதனை சேமிக்க வேண்டும். நாளை (செவ்வாய்க்கிழமை) காடுவெட்டி கிராமத்தில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குருவின் மணிமண்டபம் எனது (ஜி.கே.மணி) தலைமையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திறந்து வைக்கிறார். இதில் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சமூக முன்னேற்ற சங்க தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பா.ம.க.வின் மாநில துணை பொது செயலாளர் வைத்தி, அரியலூர் மாவட்ட செயலாளர் ரவி, சிறப்பு மாவட்ட செயலாளர் கண்ணன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் கொளஞ்சி, ஜெயங்கொண்டம் பா.ம.க. நகர செயலாளர் ரெங்கநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story