கும்பகோணம் பகுதியில் தொடர் மழை: நெல் அறுவடை பணிகள் பாதிப்பு


கும்பகோணம் பகுதியில் தொடர் மழை: நெல் அறுவடை பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 15 Sep 2019 11:00 PM GMT (Updated: 15 Sep 2019 9:54 PM GMT)

கும்பகோணம் பகுதியில் தொடர் மழை காரணமாக நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் இந்த ஆண்டு குறுகிய கால நெல் ரகங்களை சாகுபடி செய்து இருந்தனர்.

தற்போது இந்த பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. பல இடங்களில் நெல் அறுவடை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அறுவடையான நெல்லை, வயல் ஓரங்களில் விவசாயிகள் குவித்து வைத்து தூற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மாலையில் மழை

பெரும்பாலும் மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பல நாட்களாக பெய்து வரும் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நெல் அறுவடையில் ஈடுபட்டுள்ள கும்பகோணத்தை அடுத்த பேட்டை வடக்கு பகுதியை சேர்ந்த விவசாயி யோகேஸ்வரன் கூறியதாவது:- கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காவிரியில் தண்ணீர் வராத நிலையில் மோட்டார் பம்பு செட் மூலம் 4 ஏக்கரில் நெல் சாகுபடி செய்து இருந்தேன்.

காய வைக்க முயற்சி

தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் வயலில் தண்ணீர் தேங்கி உள்ளது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. பெருமளவு நெற்பயிர்கள் வீணாகிவிடும் நிலை ஏற்பட்டு உள்ளது. விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து விட்டன.

நெல் அதிக ஈரப்பதத்துடன் இருப்பதால் நெல் வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்கின்றனர். இதனால் நெல்லை காய வைக்க முயற்சி செய்து வருகிறோம். தொடர் மழையால் என்னை போன்று நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story