காஞ்சீபுரம் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் ரூ.16 லட்சம் நிதி உதவி வழங்கினார்


காஞ்சீபுரம் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் ரூ.16 லட்சம் நிதி உதவி வழங்கினார்
x
தினத்தந்தி 16 Sep 2019 10:30 PM GMT (Updated: 16 Sep 2019 7:34 PM GMT)

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 154 பேருக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள நிதி உதவிகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்துக்கு கலெக்டர் பா.பொன்னையா தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் முதியோர் ஓய்வூதியம், கல்வி தொகை, வீட்டுமனைப்பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் ஆகிய பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 384 மனுக்கள் பெறப்பட்டன. அவை அனைத்தையும் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நாவலூர் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன், காஞ்சீபுரம் அருகே தாமல் கிராமத்தை சேர்ந்த நவீன் ராஜ் ஆகிய என்ஜினீயரிங் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50 ஆயிரம் வீதம், ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 152 நலிவுற்ற முஸ்லிம் பெண்களுக்கு ரூ.14 லட்சத்து 94 ஆயிரத்து 500 மதிப்பிலான நிதி உதவிகள் உள்பட 154 பேருக்கு ரூ.15 லட்சத்து 94 ஆயிரத்து 500 மதிப்பிலான நிதி உதவிகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

மேலும் 2018-ம் ஆண்டு கொடிநாள் நிதி வசூலாக மொத்தம் ரூ.3,02,000-க்கான காசோலைகளை அதிகாரிகள் கலெக்டரிடம் வழங்கினார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் மாலதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) அமீதுல்லா, கலால் துறை உதவி ஆணையர் ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story