வள்ளம், நாட்டு படகுகளுக்கு மானியத்தில் மண்எண்ணெய் வழங்க வேண்டும் கலெக்டரிடம், மீனவர் சங்கம் மனு


வள்ளம், நாட்டு படகுகளுக்கு மானியத்தில் மண்எண்ணெய் வழங்க வேண்டும் கலெக்டரிடம், மீனவர் சங்கம் மனு
x
தினத்தந்தி 16 Sep 2019 11:00 PM GMT (Updated: 16 Sep 2019 8:04 PM GMT)

வள்ளம், நாட்டு படகுகளுக்கு மானிய மண்எண்ணெய் வழங்க வேண்டும் என்று மீனவர் ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையை பாதிக்கப்பட்ட நபரின் வாரிசுதாரரிடம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபுல் காசிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மண்எண்ணெய்

முகாமில் தூத்தூர் மண்டல மீனவர் ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகள் கிறிஸ்துதாஸ், ஆன்றோ லெனின், வர்க்கீஸ், ஜேம்ஸ் உள்பட பலர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நீரோடி முதல் இரயுமன்துறை வரையிலான மீனவ கிராமங்களில் ஆயிரக்கணக்கான வள்ளங்கள், நாட்டு படகுகள் பயன்படுத்தும் மீனவர்கள் தி.மு.க. ஆட்சி காலத்தில் இருந்து மண்எண்ணெய் மானியம் பெற்று பயன் அடைந்து வந்தனர்.

தற்போது திடீரென மண்எண்ணெய் மானியத்தை ரத்து செய்துள்ளனர். இதனால் வள்ளங்கள் மற்றும் நாட்டு படகுகளில் தொழில் செய்து வந்த மீனவ தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

மண்எண்ணெய் மானியம் கிடைத்தபோது இயற்கை சீற்ற காலங்களில் வள்ளங்கள் மற்றும் நாட்டு படகுகளில் மீன் பிடிக்கச் செல்பவர்களுக்கு மீன்கள் கிடைக்காவிட்டாலும் நஷ்டம் ஏற்படாது. ஆனால் தற்போது மண்எண்ணெய் விலைக்கு வாங்கி கடல் தொழிலுக்கு செல்லும் போது மீன்கள் கிடைக்காத நிலை ஏற்படும்போது பெரும் நஷ்டத்துக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே மீனவர் நலனில் அக்கறை கொண்ட மத்திய, மாநில அரசுகள் கடந்த காலங்களை போன்று மானியத்தில் மண்எண்ணெய் தந்து உதவ வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சாலைகள் சீரமைப்பு

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் நிர்வாகிகள் சுசீலா, ஜாண்சன், ஜேசுராஜா, தேவ அருள்ரவி, கணபதி, கார்மல், அருள்டேவிட் உள்பட பலர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், தேசிய நெடுஞ்சாலையான களியக்காவிளைவில் இருந்து காவல்கிணறு வரை உள்ள சாலை பழுதடைந்து, மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் சாலைகளில் பெரும் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளை தடுத்திடும் வகையில் கலெக்டர் தீவிர கவனம் செலுத்தி, தமிழக அரசிடம் இருந்து நிதி பெற்று சாலைகளை தரமாக போட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அழுகிய முட்டைகள்

இதேபோல் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (ரெட் ஸ்டார்) கட்சியின் மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு காப்பிக்காடு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் இருந்து அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. இதில் ஒரு மூடை அரிசியில் 50 கிலோவுக்கு பதிலாக 40 கிலோ மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அழுகிய முட்டைகளும் வழங்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story