‘இந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராடுவார்கள்’ பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேச்சு


‘இந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராடுவார்கள்’ பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 16 Sep 2019 11:15 PM GMT (Updated: 16 Sep 2019 8:37 PM GMT)

“இந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராடுவார்கள்” என்று நெய்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசினார்.

நெய்வேலி,

கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நெய்வேலியில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.கே.பாலமுருகன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் அக்ரி பி.முருகேசன் வரவேற்று பேசினார்.

எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர்கள் அருள், அன்பழகன், துணை செயலாளர் சோழன் சம்சுதீன், மருத்துவர் அணி துணை செயலாளர் ராஜா பழனிவேல், வக்கீல் பிரிவு துணை செயலாளர்கள் செந்தில்குமார், சத்தியராஜ், இளைஞரணி துணை செயலாளர் மகேஷ், தொழிற்சங்க பேரவை செயலாளர்கள் மனோகர், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

டி.டி.வி. தினகரன்

கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

தென்னாட்டு காந்தி என்று அழைக்கப்பட்டவர் அண்ணா. பெரியாரின் தத்துவங்களை அரசியல் படுத்தி திராவிட கொள்கைகளை தமிழகத்தில் வேரூன்ற செய்தவர் அண்ணா. 50 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சொன்ன கொள்கைகள், இன்றும் இந்திய துணை கண்டத்துக்கு பொருத்தமாக உள்ளது.

இந்தி திணிப்பு

மத்தியில் இதுவரை காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும், பா.ஜனதா ஆட்சியாக இருந்தாலும், அவர்கள் தமிழ்நாட்டில் இந்தியை எப்படியாவது புகுத்தி விட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள். இந்தி பேசாத மாநிலங்களில் இருமொழிக்கொள்கையை முதன்முதலில் சட்டமாக்கியவர் அண்ணா. அதனால் தான் தமிழ்நாட்டில் தாய்மொழியை பார்க்க முடிகிறது.

உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு போவதற்கு தமிழோடு ஆங்கிலம் படித்தது தான் காரணம். ஆங்கில மொழி அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. இந்தியை நாங்கள் வெறுக்கவில்லை. இந்தி திணிப்பை தான் வெறுக்கிறோம் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கக்கூடாது என்பது தான் எங்கள் கோரிக்கை. சுதந்திரத்துக்குப்பிறகு தமிழ்நாட்டில் காங்கிரஸ் இந்தியை கொண்டு வந்தது. இதனால் காங்கிரசின் ஆட்சியே போய் விட்டது. காமராஜர் போன்ற சிறந்த நிர்வாகிகள் கூட தேர்தலில் தோற்று போய்விட்டார்கள். இதை அவர்கள் காலந்தாழ்ந்து தான் உணர்ந்தார்கள். அதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

ஒன்று சேர்ந்து போராடுவார்கள்

தமிழ்நாட்டு மக்கள் வந்தாரை வாழவைக்கக்கூடியவர்கள், ஆனால் விருப்பம் இல்லாமல் எதையும் அவர்கள் மீது திணிக்க முடியாது. இங்குள்ள பா.ஜனதா தலைவர்கள், மத்திய அரசிடம் இதை சொல்ல வேண்டும். தமிழக மக்கள் மீது இந்தியை திணித்தால் மக்கள் வெகுண்டெழுவார்கள்.

எந்த ஒரு பிரிவினையும், பாகுபாடும் இன்றி தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று சேருவார்கள். அரசியல், சாதி, மதத்தை தாண்டி பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து போராடுவார்கள். 1965-ல் மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம் போல மீண்டும் ஒரு போராட்டத்துக்கு மத்திய அரசு இடம் கொடுத்து விடக்கூடாது.

மக்களிடம் கேட்க வேண்டும்

மத்திய அரசோ மாநில அரசோ ஏதாவது புதிய திட்டம் கொண்டு வர வேண்டும் என்றால் மக்களிடம் கருத்துக்கேட்டபிறகு தான் செயல்படுத்த வேண்டும். மக்கள் அதை ஏற்றுக்கொண்டால் தான் செயல்படுத்த வேண்டும். இதேபோல் தமிழகத்தில் நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை மக்கள் விருப்பப்பட்டால் தான் செயல்படுத்த வேண்டும். மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது என்று அண்ணா அன்றே சொல்லிவிட்டார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது அரசியல் சட்டப்பிரிவை நீக்கி விட்டார்கள். மக்களின் கருத்தை கேட்காமல் செய்து விட்டார்கள். அதனை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தப்போவதாக பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அறிவித்தார். ஆனால் டெல்லியில் இருந்து ஒரேயொரு போன் அழைப்பு வந்ததும் போராட்டத்தை மாற்றிவிட்டார். அண்ணாவின் வழியில் வந்தவர் என்று ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் ஒரு போன் அழைப்புக்கே பயப்படுகிறார். ஆனால் இரும்பு பெண்மணி ஜெயலலிதா பயப்படவில்லை.

பின்னடைவு

பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு சிறிய பின்னடைவு ஏற்பட்டது. அதை பயன்படுத்தி சில சுயநலவாதிகள் நம்முடைய கட்சியை விட்டு போய் விட்டார்கள். நம்முடைய கட்சிக்காரர்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள். நாங்களே நீக்கணும் என்று நினைத்தோம் அவர்களே போய் விட்டார்கள். இது அம்மாவின் உண்மையான தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. உங்களில் ஒருவனாக இருந்து நான் இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன்.

அம்மாவின் ஆட்சி என்று சொல்கிறவர்கள் இப்போது அடிமைப்பட்டு கிடக்கிறார்கள். மாநில சுயாட்சி என்னாச்சி. தி.மு.க. என்னும் தீய சக்தியை எதிர்த்து போராடும் ஒரே இயக்கம் அ.ம.மு.க. தான். என்னை பார்க்கும் சிலர் நான் தி.மு.க.வுக்கு சென்று விடுவேன் என்று வதந்திகளை பரப்புகிறார்கள். அம்மாவால் வழிகாட்டப்பட்ட என் உடம்பில் ஓடுவது தி.மு.க. எதிர்ப்பு ரத்தம். அதனால் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் உள்ள கட்சி அ.ம.மு.க. எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.

ஓடிப்போய் விடுவார்கள்

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 5-ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக்கூடாது என்று சொன்னார். ஜெயலலிதா 8-ம் வகுப்பு வரை பெயிலாக்கக்கூடாது என்று சொன்னார். ஆனால் இவர்கள் ஜெயலலிதா ஆட்சி என்று சொல்லி விட்டு 5-ம் வகுப்புக்கும் 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு அறிவித்து உள்ளனர். இதுபற்றி கேட்டால் மத்திய அரசின் கல்விக்கொள்கை என்று சொல்கிறார்கள். சசிகலா 3 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார் அவரை ஆளுங்கட்சியினர் யாரும் போய் பார்க்கவில்லை. இந்த ஆட்சி போனதும் பாதிபேர் தி.மு.க.வுக்கும் பா.ஜனதாவுக்கும் ஓடிப்போய்விடுவார்கள். அ.தி.மு.க.வுடன் அ.ம. மு.க. ஒருபோதும் சேராது. வருகிற தேர்தலில் அ.ம.மு.க. ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் பேசினார்.

கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, தலைமை நிலைய செயலாளர் உமாதேவன், துணைத்தலைவர் அன்பழகன், கடலூர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் வே.ராதாகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் சுதாகர், பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் ராம.மோகன், ஆடிட்டர் என்.சுந்தரமூர்த்தி, பண்ருட்டி நகர செயலாளர் சக்திவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவ.பெருமாள், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் பத்மநாபன், கடலூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் எஸ்.நாராயணமூர்த்தி, காட்டுமன்னார்கோவில் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.அன்பழகன், மேற்கு ஒன்றிய செயலாளர் அறிவழகன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் நேரு என்ற ஜெயபாலன், காட்டுமன்னார்கோவில் பேரூர் கழக செயலாளர் பால.கோகுலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நெய்வேலி நகர செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார். 

Next Story