அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23¼ லட்சம் மோசடி ஆசிரியை மகனுக்கு போலீஸ் வலைவீச்சு


அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23¼ லட்சம் மோசடி ஆசிரியை மகனுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Sep 2019 10:15 PM GMT (Updated: 16 Sep 2019 8:55 PM GMT)

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23¼ லட்சம் மோசடி செய்த ஆசிரியை மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் நாராயணா நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). இவரும், திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த ஆசிரியை சக்குபாயின் மகனான கிருபாசங்கரும் நண்பர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டில் விழுப்புரத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் இருவரும் சந்தித்தனர்.

அப்போது கிருபாசங்கர், தான் சென்னை தலைமை செயலகத்தில் இணை செயலாளராக பணியாற்றி வருவதாக கூறினார். இதை நம்பிய கணேசன், தனது மகன் ராகுல் பி.இ. படித்துள்ளதாகவும், அவனுக்கு ஏதாவது அரசு வேலை வாங்கித்தரும்படியும் கேட்டுள்ளார்.

ரூ.23¼ லட்சம் மோசடி

அதற்கு கிருபாசங்கர், உங்கள் மகன் ராகுலுக்கு தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்தில் இளமின் பொறியாளர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு பணம் செலவாகும் என்றும் கூறினார். இதை நம்பிய கணேசன், கடந்த 27.7.2018 முதல் 2.6.2019 வரை 7 தவணையாக மொத்தம் ரூ.23 லட்சத்து 22 ஆயிரத்தை கிருபாசங்கரிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற கிருபாசங்கர், கணேசனின் மகன் ராகுலுக்கு அரசு வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தை திருப்பித்தராமலும் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

இது குறித்து கணேசன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், நேவிஸ்அந்தோணிரோஸி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபாசங்கரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story