ஆக்கிரமிப்பு என்று கூறி வெளியேற்ற கூடாது: ‘40 ஆண்டுகளாக வசிக்கும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்’ வைகை கரையோர மக்கள் கலெக்டரிடம் மனு


ஆக்கிரமிப்பு என்று கூறி வெளியேற்ற கூடாது: ‘40 ஆண்டுகளாக வசிக்கும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்’ வைகை கரையோர மக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 16 Sep 2019 10:45 PM GMT (Updated: 16 Sep 2019 10:26 PM GMT)

40 ஆண்டுகளாக வசிக்கும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பு என்று கூறி வெளியேற்ற கூடாது என்றும் வைகை கரையோர மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மதுரை,

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜசேகர் தலைமை தாங்கி மனுக்களை வாங்கினார். அதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.

மதுரை நேதாஜிநகர் பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வைகை ஆற்று கரையோரம் 300-க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். ஆரம்பத்தில் அங்கு கூரை வீட்டில் வசித்து வந்தோம். அதன்பின் முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தபோது குடிசை மாற்று வாரியம் மூலம் எங்களது கூரை வீடுகளை எல்லாம் ஓட்டு வீடுகளாக மாற்றி தந்தார். மேலும் எங்களுடைய பகுதிக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சத்துணவுக் கூடம், சிமெண்டு சாலை, மின் இணைப்பு, கழிப்பறை வசதி, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை அரசு சார்பில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நாங்களும் வீட்டு வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை முறையாக செலுத்தி வருகிறோம். எங்களது குடியிருப்புகளுக்கு பட்டா கேட்டு பல முறை மனு கொடுத்து இருக்கிறோம்.

இந்தநிலையில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் எங்களது குடியிருப்பை ஆக்கிரமிப்பு என்று கூறி காலி செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் எங்களுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே எங்களது இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும். இல்லையென்றால் மாற்று இடம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

ஹார்விப்பட்டி மல்லிகை தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதி தொழிற்சங்கம் சார்பில் பல மனைகளாக பிரிக்கப்பட்டது. அப்போது பொது பயன்பாட்டிற்கு என்றும் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த நிலத்தை தற்போது சிலர் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் அங்குள்ள மரங்களை வெட்டி விற்றுவிட்டனர். எனவே பொது இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, அந்த பொது பயன்பாட்டு இடத்தை மீட்டு தர வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

விராட்டிபத்து கொக்குளப்பி கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் சாலை பணிக்காக எங்கள் பகுதி நிலத்தை கையகப்படுத்துவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் ஆதிதிராவிடர் மக்கள் தான் அதிக அளவில் வசிக்கின்றனர். 100 குடும்பங்களுக்கும் மேல் உள்ள இந்த பகுதியில் தான் சாலை போட வேண்டுமா?. நாங்கள் இப்போது தான் சொந்தமாக இடம் வாங்கி, வீடு கட்டி வாழ்க்கையில் முன்னேறி கொண்டு இருக்கிறோம்.

மேலும் அரசு பதிவேட்டில் உள்ள எங்கள் பகுதி குடிசை பகுதி என்று தான் உள்ளது. மேலும் மத்திய அரசின் இந்த சாலை, நேராக செல்லாமல் எங்கள் பகுதிக்குள் வந்து வளைந்து செல்கிறது. எங்களை அகற்றுவதற்காக சாலை வளைந்து செல்கிறது என்கிற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வெளிப்படையாக யார் இடத்தில் சாலை செல்கிறது என்பதனை விளக்கும் விதமாக ஒரு அமைதி குழு அமைத்து தெளிவுப்படுத்த வேண்டும்.

பொதுமக்களை பாதிக்காத வகையில் சாலை பணியினை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மேலூர் கச்சிராயன்பட்டியை சேர்ந்த அய்யாவு என்பவர் கொடுத்த மனுவில், “முல்லைப்பெரியாறு அணையிலும், வைகை அணையிலும் போதிய நீர் இருப்பு உள்ளது.

தற்போது மழையும் நன்றாக பெய்து வருகிறது. இருப்பினும் எங்களது பகுதி விவசாயத்திற்கு இன்னும் தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 116 அடி நீர் இருந்தாலே எங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்கலாம். 130 அடி நீர் இருந்தும் தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே உடனடியாக எங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும்”என்று கூறப்பட்டு இருந்தது. சிந்தாமணி வினோபாஜி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “எங்கள் தெரு சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதன்பின் சாலை சீரமைக்கப்படவில்லை. அந்த சாலை தற்போது மேடும், பள்ளமாக இருக்கிறது. மேலும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. எனவே சாலை வசதியும், வாய்க்கால் வசதியும் செய்துதர வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

Next Story