சிறுபான்மையின இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிக்கான நேர்காணல் வாலாஜாபாத்தில் நாளை மறுநாள் நடக்கிறது


சிறுபான்மையின இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிக்கான நேர்காணல் வாலாஜாபாத்தில் நாளை மறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 17 Sep 2019 11:00 PM GMT (Updated: 17 Sep 2019 7:01 PM GMT)

பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட சிறுபான்மையின இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிக்கான நேர்காணல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வாலாஜாபாத்தில் நடக்கிறது.

பெரம்பலூர்,

தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகத்தின் நிதி உதவியுடன் ‘‘கவுசல் சே குசால்தா‘‘ என்கிற திட்டத்தின் கீழ் படித்து வேலையில்லாத சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்த இளைஞர்களுக்கு காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் செயல்படும் மத்திய காலணி நிலையம் மூலம் இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வழங்குவதற்கும், பயிற்சிக்கு பிறகு வேலை வாய்ப்பு பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பயிற்சிக்கும் தலா 20 நபர்கள் வீதம் மொத்தம் 40 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியினர் மற்றும் ஜெயின் பிரிவை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி பெற விரும்பும் பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5. லட்சத்திற்கு மிகாமலும் 18 முதல் 55 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். இப்பயிற்சியின் போது ஒரு பயனாளிக்கு ரூ.1,534 பயிற்சி உதவித்தொகையாக அளிக்கப்படும். உண்டு, உறைவிடக் கட்டணம் ஏதும் வழங்கப்படமாட்டாது.

தொடர்பு கொள்ளலாம்

இதற்கான நேர்காணல் காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத், எண்.64 சி, சாலை தெரு, புதேரி, குஜராத்சத்திரம் அருகில் செயல்படும் மத்திய காலணி பயிற்சி நிலையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. மேற்படி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் அசல் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு சென்னை மத்திய காலணி பயிற்சி நிலையத்தின் டாம்கோ மேலாளரை 8939813412 என்ற செல்போன் எண்ணிலும் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் தொலைபேசி எண் 044-28514846-ல் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி திட்டத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள சிறுபான்மையின இளைஞர்கள் சேர்ந்து பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவைலை மாவட்ட கலெக்டர்கள் சாந்தா (பெரம்பலூர்), டி.ஜி.வினய் (அரியலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story