முன்விரோதத்தில் பீர்பாட்டிலால் தொழிலாளி மீது தாக்குதல் - 4 பேருக்கு வலைவீச்சு


முன்விரோதத்தில் பீர்பாட்டிலால் தொழிலாளி மீது தாக்குதல் - 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 18 Sep 2019 10:30 PM GMT (Updated: 18 Sep 2019 2:02 PM GMT)

முன்விரோதத்தில் பீர்பாட்டிலால் தொழிலாளியை தாக்கிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருமக்கோட்டை,

மதுக்கூர் அருகே உள்ள பாவாஜிக்கோட்டையை சேர்ந்தவர் நீலமோகன் (வயது 37). கூலித் தொழிலாளி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த நாடிமுத்து (35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் திருமக்கோட்டை அருகே உள்ள மகாராஜபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நீலமோகன் மது குடிக்க சென்றுள்ளார். 

இந்த தகவல் அறிந்த நாடிமுத்துவும், அவருடைய நண்பர்களான பாவாஜிக்கோட்டையை சேர்ந்த முருகேசன் (34), முத்துப்பேட்டையை சேர்ந்த நடராஜன் (30) மற்றும் அடையாளம் தெரியாத நாடிமுத்துவின் உறவினர் ஒருவர் ஆகிய 4 பேரும் அதே டாஸ்மாக் கடைக்கு வந்து மது குடித்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் சேர்ந்து நீலமோகனிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது நாடிமுத்து என்பவர் பீர்பாட்டிலால் நீலமோகனின் பின்பக்க தலையில் தாக்கினார். குடிபோதையில் இருந்த மற்ற 3 பேரும் நீலமோகனை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். 
இதனால் படுகாயம் அடைந்த நீலமோகன் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதுகுறித்து திருமக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, சப்&இன்ஸ்பெக்டர் முத்துக்காமாட்சி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி  வருகிறார்கள்.

Next Story