தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே 100 இடங்களில் தடுப்பணைகளை அரசு கட்ட வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி


தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே 100 இடங்களில் தடுப்பணைகளை அரசு கட்ட வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 18 Sep 2019 11:15 PM GMT (Updated: 18 Sep 2019 6:58 PM GMT)

தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே 100 இடங்களில் தடுப்பணைகளை அரசு கட்ட வேண்டும் என்று திருச்சியில் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

மலைக்கோட்டை,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் ஞானதேசிகன், கோவை தங்கம், வெங்கடேசன், மாநில பொதுச்செயலாளர் விடியல்சேகர், மாநில செயலாளர் சக்தி வடிவேல், திருச்சி மாவட்ட தலைவர்கள் நந்தாசெந்தில்வேல், குணா, ரவீந்திரன், மாவட்ட பொருளாளர் கே.டி.தனபால், இளைஞர் அணி தலைவர் தனசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அப்போது ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியை திணிக்க முடியாது

உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. பலமான கட்சியாக உருவெடுக்க இந்த கூட்டத்தை நடத்தி வருகிறோம். வருகிற 26-ந் தேதி இளைஞரணி கூட்டம் ஈரோட்டில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் இந்தி உள்பட எந்த ஒரு மொழியையும் மக்களின் விருப்பம் இல்லாமல் யார் மீதும் திணிக்கவும் முடியாது,. கட்டாயப்படுத்தவும் முடியாது. தமிழக மக்கள் அதனை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். திருச்சி மாவட்டத்தில் உத்தமர்சீலி, கிளிக்கூடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை வாழை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி இருந்தன. தற்போது காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் வாழை பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. எனவே, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வாழை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும்.

100 இடங்களில் தடுப்பணைகள்

தமிழ்நாட்டில் காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, காவிரி ஆற்றின் குறுக்கே 100 இடங்களில் தடுப்பணைகளை கட்ட வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். டெல்டா மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் நாற்று விடும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த பணி நல்ல முறையில் நடைபெற விவசாயிகளுக்கு உரம், பயிர்கடன், விதைநெல், விவசாய கடன் போன்றவற்றை தங்கு தடையின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிளக்ஸ் போர்டு, கட்அவுட், பேனர் போன்றவற்றை தடை செய்யவேண்டும் என்ற கொள்கைக்கு மாறுபாடு கிடையாது. அதே சமயத்தில் டிஜிட்டல் பேனர் தொழில் நடத்தும் பல தொழிலாளர்களின் வாழ்க்கையை எண்ணிப்பார்த்து அரசு மற்றும் போலீசார் அனுமதி வழங்கும் இடங்களில் பொதுமக்கள் எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் பேனர்களை வைக்க அனுமதி அளிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எவ்வளவு இடங்களில் போட்டியிடுவது என்பது அந்த நேரத்தில் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story