வையம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்


வையம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
x
தினத்தந்தி 18 Sep 2019 10:45 PM GMT (Updated: 18 Sep 2019 8:07 PM GMT)

வையம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வையம்பட்டி,

வையம்பட்டியை அடுத்த முகவனூர் ஊராட்சிக்குட்பட்ட சின்ன அணைக்கரைப்பட்டியில் அதிக அளவிலான குடியிருப்புகள் உள்ளன. இங்கு பொதுமக்களுக்கு குடிநீ்ர் வினியோகம் செய்வதற்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

தற்போது அந்த தொட்டியில் கீழ் பகுதியில் உள்ள 4 தூண்களும் முற்றிலும் சேதமடைந்து விட்டதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயநிலையில் உள்ளது. இருப்பினும் அந்த தொட்டியில்தான் தற்போதும் தண்ணீரை ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகிறார்கள்.

முற்றுகை

எனவே மாற்று நீர்த்தேக்க தொட்டி கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அந்தபகுதி மக்கள் கடந்த 3 வருடமாக அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பலமுறை மனு அளித்தும் கூட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது பெய்து வரும் மழைக்கு குடிநீர் தொட்டி இடிந்து விழுந்து விட்டால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை அறிந்த மக்கள் நேற்று காலை வையம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வையம்பட்டி அ.தி.மு.க. ஒன்றிய ்செயலாளர் சேது ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story