தோவாளையில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்


தோவாளையில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 18 Sep 2019 11:00 PM GMT (Updated: 18 Sep 2019 8:12 PM GMT)

தோவாளையில் ரூ.20 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.

ஆரல்வாய்மொழி,

தோவாளையில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி துறை சார்பில் ரூ.20 லட்சம் செலவில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். துணை பதிவாளர் (பால்வளம்) சுரேஷ் வரவேற்றார்.

விழாவில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்று புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பிறகு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் குத்துவிளக்கு ஏற்றினார். இதைத் தொடர்ந்து விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியபோது கூறியதாவது:-

உயர்தர பாலகம்

தோவாளை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் பழமை வாய்ந்தது. இந்த சங்க அலுவலகம் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வந்ததால் பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். எனவே சங்கத்துக்கு சொந்தமாக கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது. இங்கு 700 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த ஊராட்சியை பொறுத்த வரையில் 700 லிட்டர் பால் கொள்முதல் என்பது அதிகம்தான். எனினும் பால் உற்பத்தியை படிப்படியாக அதிகரித்து 2 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய வேண்டும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு சென்று பால் பண்ணைகளின் நவீன தொழில்நுட்பம் தொடர்பாக பார்வையிட்டு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து சேலத்தில் உயர்தர பால்பண்ணை அமைக்க உத்தரவிட்டுள்ளார். வெளிநாடு பயணத்தின் மூலமாக 8 ஆயிரத்து 830 கோடி ரூபாய் முதலீடுகளை தமிழகத்துக்கு கொண்டு வந்து இருக்கிறார். குமரி மாவட்டத்தில் உயர்தர பாலகம் கொண்டு வரப்படும். ஒரு இடங்களில் இல்லை, 10 இடங்களில் அமைத்து தருமாறு கேட்டாலும் அமைத்து தருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு

இதை தொடர்ந்து தோவாளை பூ மார்க்கெட்டுக்கு சென்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆய்வு செய்தார். அங்குள்ள வியாபாரிகளிடம் குறைகள் கேட்டறிந்தார். அதன்பிறகு அ.தி.மு.க. நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசினார். முன்னதாக அவர் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜாண்தங்கம், மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ராஜன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கிருஷ்ணகுமார், சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், லதா ராமச்சந்திரன், தோவாளை பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் மாடசாமி, செயலாளர் மாதவன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இசக்கிமுத்து, முத்து, தாழக்குடி பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் ராஜகுமார், பூ கட்டும் அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகன், தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் ரோகிணி அய்யப்பன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தர்மர் மற்றும் சந்துரு, ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story