தமிழகத்தில் இந்தி புகுந்து விட்டதாக கூறி தி.மு.க. போராட்டத்தை தூண்டி விடுகிறது அமைச்சர் குற்றச்சாட்டு


தமிழகத்தில் இந்தி புகுந்து விட்டதாக கூறி தி.மு.க. போராட்டத்தை தூண்டி விடுகிறது அமைச்சர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Sep 2019 11:15 PM GMT (Updated: 18 Sep 2019 8:25 PM GMT)

தமிழகத்தில் இந்தி புகுந்து விட்டதாக கூறி தி.மு.க. போராட்டத்தை தூண்டி விடுகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டினார்.

நாகர்கோவில்,

பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வந்தபோது, சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் என்று கூறினார். பிரதமரே தமிழ் மொழியின் சிறப்பை சொல்லிவிட்டார். எனவே இனி அதுபற்றி விவாதம் செய்ய எதுவும் இல்லை. உள்துறை மந்திரி இந்தி மொழி பற்றி பேசினாரே தவிர தமிழை குறை சொல்லவில்லை. ஆனால் தமிழகத்தில் இந்தி புகுந்து விட்டது என்று கூறி தி.மு.க. போராட்டத்தை தூண்டுவது கண்டிக்கத்தக்கது. தி.மு.க.வினர் தாங்கள் செய்த தவறுகளை மறைப்பதற்காக இதுபோன்ற போராட்டங்களை அறிவிக்கிறார்கள்.

ராகுல்காந்தி தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து கூறியதால் என் நாக்கை அறுத்துவிடுவதாக காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாக சொல்கிறீர்கள். இன்றைய காங்கிரஸ் இத்தாலி காங்கிரஸ் ஆகும். ராகுல்காந்தி பற்றி நான் கூறிய கருத்து சரிதான். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது அவரை சோனியாகாந்தி வழிநடத்தினார். ஆனால் அப்போது வேறு ஒரு தலைவர் வழிநடத்தி இருந்தால் ஈழ போராளிகள் அழிந்திருக்க மாட்டார்கள்.

தி.மு.க. மீது குற்றச்சாட்டு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் முடிந்து வந்த பிறகு சேலம் மாவட்டம் தலைவாசலில் 1000 கோடி ரூபாய் செலவில் உயர்தர பால்பண்ணை அமைக்க உத்தரவிட்டுள்ளார். அங்கு கால்நடை உற்பத்தி நிலையம், பால்வளத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட உள்ளன. அதற்கான நடவடிக்கை ஒரு மாதத்தில் எடுக்கப்படும். ஆவின் பால் விலை உயர்வு மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய அளவுக்கு தான் உள்ளது.

தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த அரசு உத்தரவு போட்டது உண்மை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆனால் 3 ஆண்டுகள் வரை தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும், தோல்வி அடைந்தாலும் அடுத்த வகுப்புக்கு போகலாம். பேனர் விவகாரத்தில் அ.தி.மு.க.வை மட்டும் குற்றம் சாட்டக்கூடாது. அனைத்து கட்சிகளும் பேனர் வைத்துள்ளன. எங்களை விட தி.மு.க. தான் அதிகம் பேனர் வைத்துள்ளது. சுபஸ்ரீ இறப்புக்கு பிறகும் தி.மு.க.வினர் பேனர் வைக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கன்னியாகுமரி

முன்னதாக அவர் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “தமிழகத்தில் இனி அடுத்த ஆண்டு தான் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நாகரிகமற்று பேசி உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியதும் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்து விட்டார். இந்திய பிரஜை என்ற முறையில் இதுபற்றி கேட்டால் கே.எஸ்.அழகிரி உரிய பதிலை அளிக்க வேண்டும். அதை தவிர்த்து போராட்டம் என்று ஆணவமாக மிரட்டினால் பயப்பட மாட்டோம்“ என்றார். 

Next Story