நெல்லையில், தனியாக செல்லும் பெண்களிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது


நெல்லையில், தனியாக செல்லும் பெண்களிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 Sep 2019 10:15 PM GMT (Updated: 18 Sep 2019 10:15 PM GMT)

நெல்லையில் தனியாக செல்லும் பெண்களிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பேட்டை, 

நெல்லை சுத்தமல்லி பாரதியார் நகரைச் சேர்ந்தவர் இசக்கி. இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 34). இவர் கடந்த ஒரு மாதமாக சுத்தமல்லி, பேட்டை, கோடீஸ்வரன்நகர், வீரபாகுநகர், சாஸ்திரிநகர், செந்தமிழ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரோடு, தெருக்களில் தனியாக செல்லும் பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து ஆபாசமாக, அவதூறாக பேசி வந்தார்.

ஆனால் இதுகுறித்து யாரும் புகார் செய்யாததால் தொடர்ந்து அவர் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பேட்டை ரொட்டிக்கடை பரதர் தெருவில் தனியாக சென்ற பெண்களிடம் ஆபாசமாக பேசினார்.

இந்த நிலையில் நேற்று இரவில் அந்த தெருவில் ஒரு பெண் தனியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வெங்கடேஷ், அந்த பெண்ணிடம் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து அந்த பகுதியில் நின்ற பொதுமக்களிடம் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் அவரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

இதுகுறித்து பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடேஷை கைது செய்து அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story