பள்ளிகளின் செயல்பாட்டை முறையாக கண்காணிக்க வலியுறுத்தல்


பள்ளிகளின் செயல்பாட்டை முறையாக கண்காணிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Sep 2019 10:19 PM GMT (Updated: 18 Sep 2019 10:19 PM GMT)

மாவட்டத்தில் பள்ளி களின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்த போதிலும் நடவடிக்கை ஏதும் இல்லாததால் பள்ளிகளின் செயல்பாடுகளை முறையாக கண்காணிக்க முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இது தவிர தனியார் பள்ளிகளும் உள்ளன. கிராமப்புற பள்ளிகளிலும், நகர்புற பள்ளிகளிலும் 25 சதவீத மாணவ, மாணவிகள் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழகங்களும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பல்வேறு பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் மனுக்கள்அனுப்பப்படுகின்றன. பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மீதும், பள்ளியின் செயல்பாடுகள் குறித்தும், பள்ளிகளில் உள்ள கற்பித்தல் திறன் குறித்தும் புகார் மனுக்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்படுகிறது. சில பள்ளிகளில் வெளிநபர் தலையிடுகளால் பள்ளி செயல்பாடு பாதிக்கப்படுவதாகவும், மாணவர்கள் இடையே பிரச்சினைகள் ஏற்படுத்துவதாகவும் அப்பகுதியில் உள்ளவர்களால் புகார் மனுக்கள் மாவட்ட, மாநில பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்படுகிறது.

ஆனால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் எந்த புகார் மனு மீதும் முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதில்லை என சமூகஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் இந்த பாராமுக நடவடிக்கையால் தான் சிலபள்ளிகளில் மாணவர்கள் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டு அதனால் அந்த பள்ளிகள்அமைந்துள்ள கிராமங்களிலும் பொது அமைதி பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

மாவட்ட பள்ளிக்கல்வித்துறையில் 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கல்வி மாவட்டமும், மாவட்டகல்வித்துறை அதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுதவிர உதவி தொடக்ககல்வி அதிகாரிகள் பணிஅமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அவ்வப்போது பள்ளிகளுக்கு சென்று நேரடியாக ஆய்வு செய்து பள்ளிகளின் செயல்பாடு குறித்து மாவட்ட பள்ளிக்கல்வித்துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்படும் புகார் மனுக்கள் மீதும் தொடக்க நிலை விசாரணை மேற்கொண்டு மாவட்டகல்விஅதிகாரிக்கு இவர்கள் அனுப்பும் அறிக்கையின் அடிப்படையில் தான் மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் இந்தநடைமுறை ஏதும் முறையாக பின்பற்றப்படாதது ஏன் என்று தெரியவில்லை.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை ஏதும் எடுக்காததால் மாவட்டநிர்வாகத்திடமும் புகார் மனுக்கள் தரப்படுகின்றன. மாவட்ட நிர்வாகம் இந்த புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித்துறைக்குத்தான் திரும்பவும் அனுப்பி வைக்கிறது. ஆனாலும் இந்த மனுக்கள் மீதும் முறையான விசாரணை நடத்தப்படுவதில்லை. சில குறிப்பிட்ட மனுக்கள் மீது பாரபட்சமான முறையில் விசாரணை நடத்தி மேல் நடவடிக்கை எதுவும் தேவையில்லை என கைவிடப்படும் நிலையும் உள்ளது.

மாவட்டத்தில் தொடக்ககல்வியை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற நிலையில் தான் மத்திய அரசு இந்த மாவட்டத்தை பின்தங்கியமாவட்ட பட்டியலில் சேர்த்துள்ளது. உயர்நிலைமற்றும் மேல்நிலை பொதுதேர்வுகளில் கால்நூற்றாண்டுக்கு மேல் சாதனைபடைத்து வந்தஇந்த மாவட்டம் தற்போது அதிலும் பின்தங்கிஉள்ளது. இந்த நிலைக்கு காரணம் பள்ளிகளின் செயல்பாடுகள், கற்பித்தல் பணியின் தரம் ஆகியவை முறையாக கண்காணிக்கப்படாதது தான் எனகூறப்படுகிறது.

எனவே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செயல்பாடுகளை முறையாக கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரப்படுகிறது. மேலும் தனியார் பள்ளிகளில் நிர்வாகத்தினரின் செயல்பாடுகளால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அதனையும் முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம் ஆகும். இல்லையேல் இந்த மாவட்டம் பள்ளிக்கல்வியில் படைத்து வந்த சாதனையை மீண்டும் எட்டமுடியாத நிலை ஏற்பட்டு விடும்.

Related Tags :
Next Story