குலசேகரம் அருகே துணிகரம் ஒரே நாளில் 4 கடைகளில் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


குலசேகரம் அருகே துணிகரம் ஒரே நாளில் 4 கடைகளில் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 19 Sep 2019 11:00 PM GMT (Updated: 19 Sep 2019 7:42 PM GMT)

குலசேகரம் பகுதியில் ஒரே நாளில் 4 கடைகளில் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குலசேகரம்,

குலசேகரம் அருகே வளியாற்றுமுகம் அந்தூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 60). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மேஜையில் இருந்த ரூ.7 ஆயிரம் மாயமாகியிருந்தது. நள்ளிரவில் கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

அதேபோல் அருகில் உள்ள ஆல்பன் (47) என்பவர் பெட்டிக்கடையிலும் பூட்டை உடைத்து, ரூ.3 ஆயிரம் திருடி உள்ளனர். பின்னர் பணம் வைத்திருந்த மரப்பெட்டியை மர்ம நபர்கள் அருகில் உள்ள வாய்க்காலில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

மேலும் மர்ம ஆசாமிகள் மங்களம் சந்திப்பில் பொன்னுமுத்தன் (62) என்பவரின் பெட்டிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.23 ஆயிரத்து 500-ஐயும், அதே பகுதியில் சுவாமிதாஸ் (50) என்பவர் ரப்பர் ஷீட் கடையில் ஆயிரம் ரூபாயையும் திருடி உள்ளனர்.

ஒரே நாளில் மர்ம நபர்கள் 4 கடைகளில் கைவரிசை காட்டியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வலைவீச்சு

இதுகுறித்து குலசேகரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story